மோகனூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்: ராஜேஷ்குமார் எம்.பி. தகவல்

மோகனூரில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என ராஜேஷ்குமார் எம்.பி. கூறி உள்ளார்.

Update: 2024-06-28 07:29 GMT

மோகனூரில் நடைபெற்ற மக்கள் தொடர்பு திட்ட முகாமில், ராஜேஷ்குமார், எம்.பி., கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மோகனூரில் ரூ. 10 கோடி மதிப்பில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கும் என ராஜேஷ்குமார் எம்.பி. தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஊராட்சி ஒன்றியம், ஆரியூர் கிராமத்தில், மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. டி.ஆர்.ஓ., சுமன் தலைமை வகித்தார். ராஜ்யசபா எம்.பி. ராஜேஷ்குமார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, 317 பயனாளிகளுக்கு, ரூ. 1.54 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

மோகனூர் தாலுகாவில், அதிகளவில் விவசாயம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மோகனூரில் விவசாய விளை பொருட்கள் விற்பனைக்காக, ரூ. 10 கோடி மதிப்பில், ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் அமைக்கப்படும் என, தமிழக சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, ஒழுங்குமுறை விற்பனை கூடம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் விரைவில் தொடங்கப்படும்.

முன்னாள் முதல்வர் கருணநிதி ஆட்சி காலத்தில், 1997ல், சேலம் மாவட்டத்தில் இருந்து பிரித்து, நாமக்கல்  தனி வருவாய் மாவட்டமாக உருவாக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று, புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கி, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, மக்கள் தொடர்பு திட்ட முகாமில், பல்வேறு அரசுத்துறைகளின் சார்பில் 317 பயனாளிகளுக்கு, ரூ. 1.54 கோடி மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை, எம்.பி., ராஜேஷ்குமார் வழங்கினார். முன்னதாக, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில், அரசின் திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கை, எம்.பி. ராஜேஷ்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மோகனூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் சரஸ்வதி, ஆரியூர் பஞ்சாயத்து தலைவர் சாமிநாதன், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் நவலடி, ஆர்.டி.ஓ. பார்த்தீபன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News