திண்டுக்கல் வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம்- பக்தர்கள் தரிசனம்
திண்டுக்கல்லில் உள்ள வெள்ளை விநாயகருக்கு 16 வகை அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வகையில், திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெள்ளை விநாயகர் திருக்கோவிலில், இன்று சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. ஆகம விதிப்படி அதிகாலையில், சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற்றது.
பின்னர், கோவிலை சுற்றி கடப் புறப்பாடு நடைபெற்று, விநாயகப் பெருமானுக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள், தயிர் உள்ளிட்ட 16 வகை பொருட்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. இவற்றை, ஏராளமான பக்தர்கள் கோவிலின் வெளிப்புறம் நின்று தரிசித்து வழிபட்டனர்.