சர்வதேச யோகா போட்டியில் கூலித் தொழிலாளியின் மகன் 2ம் இடம் பிடித்து சாதனை

சர்வதேச அளவிலான யோகா போட்டியில் கூலித் தொழிலாளியின் மகன் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

Update: 2022-01-16 13:49 GMT

சர்வதேச யோகா போட்டியில் 2ம் இடம் பிடித்த தமிழரசன்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள அரசப்பிள்ளைபட்டி கிராமத்தைச் சேர்ந்த புனுகுசாமி செல்வநாயகி தம்பதியினரின் மகன் தமிழரசன்.

இவர் அருகில் உள்ள காவேரியம்மாபட்டி அரசு பள்ளியில் ஏழாம் வகுப்பு முதல் யோகா பயிற்சியை துவங்கி தொடர்ந்து ஒட்டன்சத்திரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்புவரை படித்து அங்கேயும் யோகா பயிற்சியில் ஈடுபட்டு பல போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளைப் பெற்றுள்ளார்.

அதற்கு அடுத்தபடியாக யோகா மீது தீராத பற்றுகொண்ட தமிழரசன், டிப்ளமா இன் யோகா என்னும் தனிப்பிரிவு பாடத்தை எடுத்து அதற்கான டிப்ளமோ பயிற்சியை முடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து இவர் 2019ஆம் ஆண்டு யோகா பெடரேஷன் ஆப் இந்தியா நடத்திய நேஷனல் அளவிலான போட்டியில் கலந்து கொண்டு ஆறாவது இடத்தை பெற்றுள்ளார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி கோயம்புத்தூரில் நடைபெற்ற செகண்ட் நேஷனல் ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்து கொண்டு மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை பாண்டிச்சேரியில் நடைபெற்ற சர்வதேச யோகா திருவிழாவில் 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் கலந்துகொண்டு சர்வதேச அளவில் இவர் இரண்டாம் இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளார்.

அவருக்கு பாண்டிச்சேரியின் முதலமைச்சர் ரங்கசாமி கோப்பை மற்றும் வெற்றிச் சான்றிதழை வழங்கி பாராட்டியுள்ளார்.

இந்தப் போட்டியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அதில் இவர் 2ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் இதுபற்றி தமிழரசன் கூறும்போது, எங்களது குடும்பம் கூலி வேலை செய்து வரும் குடும்பம். யோகா மீது தீராத பற்று வைத்துள்ளதால், அதில் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்பதே என்னுடைய லட்சியம் ஆகும்.

என்னுடைய பொருளாதார சூழ்நிலை காரணமாக வெளிநாடுகளில் கலந்துகொள்ளும் பல போட்டிகளில் என்னால் பங்கேற்க முடியாத சூழ்நிலை உள்ளது. அதனால் அரசு உதவி செய்து இண்டர்நேஷனல் அளவில் நடைபெறும் பல போட்டிகளிலும் வெளிநாடுகளில் நடைபெறும்.

இந்த யோகா போட்டிகளிலும் பங்கேற்க எனக்கு உதவி செய்தால் நான் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கு மிகப்பெரிய பெருமையை தேடித் தருவேன் என்று கூறினார்.

இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுத்து அவருக்கு உதவி செய்தால் இந்தியாவுக்கு பெருமை சேர்ப்பார் என்று அப்பகுதி மக்களும் தெரிவிக்கின்றனர்.

Tags:    

Similar News