பாதுகாப்பில் குளறுபடி என்று கூறி நாடகமாடிய பிரதமர்மோடியை கண்டித்து மனிதசங்கிலி
திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மாவட்ட மாநகர் காங்கிரஸ் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசு பிரதமரின் பாதுகாப்பில் குளறுபடி செய்துள்ளது என்று கூறி நாடகமாடிய பிரதமர் மோடியை கண்டித்து திண்டுக்கல்லில் காங்கிரஸார் மனிதசங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரன்ஜித் சிங் சன்னி முதல்வராக உள்ளார். கடந்த வாரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாபில் நடந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வந்தபொழுது பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அரசை குறை கூறிவிட்டு திரும்பிச் சென்றார்.
இதனை கண்டித்து காங்கிரஸ் சார்பில் இந்தியா முழுவதும் பல கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக, இன்று திண்டுக்கல் பெரியார் சிலை அருகே மாவட்ட மாநகர் காங்கிரஸ் சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக கூறி நாடகம் நடத்திய மோடியை கண்டித்து மோடிக்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் தலைமையில் நடைபெற்ற இந்த மனிதச்சங்கிலி ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிள் முகமது சித்திக், வேங்கை ராஜா, வரதராஜன் உள்ளிட்ட பல காங்கிரஸ் உறுப்பினர்களும், பொதுமக்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு மோடிக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பினர்.