பாலியல் வழக்கு: கல்லூரியின் தாளாளரை 3 நாட்கள் விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதி

கல்லூரி தாளாளர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதையடுத்து நீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Update: 2021-11-26 13:15 GMT

மாணவிகளிடம் பாலியல் ரீதியில் அத்துமீறியதாக தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த கல்லூரியின் தாளாளர்  ஜோதிமுருகனை 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த மகிளா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

திண்டுக்கல்- பழநி சாலையில் முத்தனம்பட்டி அருகே செயல்பட்டு வரும் சுரபி நர்சிங் கல்லூரியின் தாளாளர் ஜோதிமுருகன் கல்லூரியில் படிக்கும் மாணவிகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய தாக எழுந்த புகாரையடுத்து 3 மாணவிகள் திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசில் புகார் செய்தனர்.  இந்த புகாரின் அடிப்படையில்,  கல்லூரியில் விடுதி காப்பாளர் அர்ச்சனா உள்ளிட்ட மேலும் சிலர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதில், விடுதி காப்பாளர் அர்ச்சனா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே போலீசாரால் தேடப்பட்டு வந்த கல்லூரி தாளாளர் ஜோதி முருகன், கடந்த 23ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டம், போளூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 26ம் தேதி (இன்று) வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டர் .இதையடுத்து ஜோதி முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

இன்றோடு நீதிமன்ற காவல் முடிவதை தொடர்ந்து, கல்லூரி தாளாளர் ஜோதி முருகன் இன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி புருஷோத்தமன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் . இதையடுத்து திண்டுக்கல் தாடிக்கொம்பு போலீசார் கல்லூரி தாளாளர் ஜோதிமுருகனை 7 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு மனு செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன் மூன்று நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார். கல்லூரி தாளாளர் ஜோதிமுருகன் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவதை அடுத்து நீதிமன்றம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

Tags:    

Similar News