அரசு பேருந்து நேரத்தை மாற்ற பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் சாலை மறியல்

அரசு பேருந்தின் நேரத்தை மாற்ற வலியுறுத்தி நகர பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2022-01-07 09:28 GMT

திண்டுக்கல் அருகே நகர பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் 100 க்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல் - கன்னிவாடி இடையே நாள் தோறும் அரசு நகரப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல் அடுத்துள்ள கொட்டப் பட்டி வழியாகவும் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு நகர பேருந்து இயக்கப்பட்டு வந்தது.

ஆனால் கொட்டப்பட்டி வழியாக இயக்கப்பட்டு வந்த நகரப்பேருந்து தற்போது திமுக அரசு நிறுத்தப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக கொட்டப்பட்டியை சேர்ந்த பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பேருந்து வசதி இன்றி பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வந்து பேருந்தில் பயணம் செய்யக்கூடிய நிலை இருந்து வந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொட்டபட்டி வழியாக கன்னிவாடிக்கு அரசு பேருந்து தற்போது இயக்கப்பட்டு வருகிறது.

ஆனால் காலையில் கன்னிவாடியில் இருந்து வரக்கூடிய நகரப்பேருந்து 10:30 மணிக்கு தான் கொட்டப்பட்டிக்கு வருகிறது.

இதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவ மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லக்கூடிய பொதுமக்கள் மீண்டும் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தான் பேருந்தில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

பெயரளவில் பேருந்தை இயக்குவது போல் காண்பித்து மக்களை ஏமாற்றுகிறது திமுக அரசு. ஆகவே கன்னிவாடியில் இருந்து வரக்கூடிய பேருந்தின் நேரத்தை மாற்றி காலை 9 மணிக்குள் வர ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை முறையிட்டும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் இன்று காலை கொட்டப்பட்டிக்கு கன்னிவாடி யிலிருந்து வந்த அரசு நகர பேருந்தை சிறைபிடித்து பள்ளி மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திண்டுக்கல் தாலுகா போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என உறுதி அளித்ததன் பேரில் பல மணி நேர பேருந்து சிறைபிடிப்பு போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

Similar News