ஊரடங்கால் வேலையில்லை: சொந்த ஊர் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில், ஊரடங்கால் வேலையிழந்த வட மாநிலத் தொழிலாளர்கள், தங்களது சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Update: 2021-05-28 05:13 GMT

கோப்பு படம்

திண்டுக்கல் மாவட்டத்தில் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், ஓட்டல்கள், வெல்டிங் பட்டறைகள், இரும்பு கடைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகளவில் பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பீகார், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, உத்திரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

அவ்வகையில், திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் வெளிமாநில தொழிலாளர்கள் சுமார் 10,000 பேர் வேலை செய்கின்றனர். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் அனைத்து தொழிற்சாலைகள், கடைகள் மூடப்பட்டன. அதையடுத்து சிறப்பு ரயில்கள் மூலம் அவர்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்பி சென்றனர். பின்னர், கொரோனா பரவல் குறைந்ததால் மீண்டும் வேலைக்கு வந்தனர்.

இந்நிலையில், கொரோனாவின் 2-வது அலை பரவத்தொடங்கியது. இதையடுத்து கடந்த 10-ம் தேதி தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 24-ம் தேதி முதல், ஒரு வாரத்துக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, தற்போது அமலில் இருக்கிறது.

இதனால், தொழிற்சாலைகள் ,ஓட்டல், இரும்பு கடைகள், லேத் பட்டறைகளில் வேலை செய்த தொழிலாளர்கள் வேலை இழந்தனர் . சாலையோர கடைகளுக்கு அனுமதி அளிக்காததால் பானிபூரி, போர்வை, பஞ்சுமிட்டாய் ஆகியவற்றை விற்பனை செய்ய முடியவில்லை. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலையிழந்து தவிக்கின்றனர்.

ஊரடங்கு அமலில் இருந்தும் கொரோனா பரவல் இன்னும் குறையவில்லை. இதனால் ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்ற அச்சத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் இருக்கின்றனர். எனவே கொரோனா குறையும் வரை சொந்த ஊரில் இருக்க முடிவு செய்து, அங்கு  திரும்பி செல்கின்றனர்.

அதன்படி பீகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் சிலர் சொந்த ஊருக்கு செல்வதற்காக திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தனர். ஆனால் திண்டுக்கல்லில் இருந்து பீகாருக்கு ரயில் சேவை இல்லை. இதனால் திருச்சி அல்லது சென்னைக்கு சென்று அங்கிருந்து சொந்த மாநிலத்துக்கு செல்லும்படி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பீகார் தொழிலாளர்கள் ரயில் நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்து குருவாயூர் ரயிலில் ஏறி திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.

Tags:    

Similar News