ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு

நான்கு மணி அளவில் திறந்த சொர்க்கவாசல் வழியாக லக்குமி நாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

Update: 2022-01-13 11:30 GMT

சொர்க்கவாசல் வழியாக லக்குமி நாராயணப் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்

திண்டுக்கல் மாவட்டம் , பழனி ஶ்ரீ இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வியாழக்கிழமை அதிகாலை சொர்க்கவாசல்  திறக்கப்பட்டது. கொரோனா பரவல் கட்டுப்பாடு காரணமாக நிகழ்ச்சியில் பக்தர்கள்  கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவத் திருக்கோயில்களில் அதிகாலை பரமபதவாசல் எனப்படும் சொர்க்க வாசல் திறக்கும் வைபவம் நடைபெற்றது.பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயிலான ஶ்ரீ இலக்குமி நாராயண பெருமாள் கோயிலில் அதிகாலை அருள்மிகு இலக்குமி சமேதர் நாராயணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நான்கு மணி அளவில் சொர்க்கவாசல்  திறக்கப்பட்டு அதன் வழியாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கருடாழ்வார் எதிர்சேவை புரிந்தார்.சொர்க்கவாசல் திறப்பின் போது கொரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.எனினும் விழா முடிந்த பிறகு பக்தர்கள் கோயிலில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். பரமபதவாசல் வழியே சுவாமி எழுந்தருளிய பின் கருடாழ்வார் வாகனத்தில் நான்கு இரதவீதி உலா எழுந்தருளினார்.

இதேபோல பழனியை அடுத்துள்ள பாலசமுத்திரம் அகோபில வரதராஜ பெருமாள் கோயிலிலும் பரமபத வாசல் திறக்கப்பட்டு அருள்மிகு அகோபில வரதராஜ பெருமாள் மற்றும் லட்சுமிதேவி ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சொர்க்கவாசல் ராப்பத்து என பத்து நாட்களுக்கு திறந்திருக்கும்.  நிகழ்ச்சியில் இணைஆணையர் நடராஜன், உதவி ஆணையர் செந்தில்குமார், உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News