திண்டுக்கல் மதுக்கடை அருகே கார் தீப்பிடித்து எரிந்து சேதம்

கேஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட கார் என்பதால் தீப்பிடித்து எரிந்து முழுவதும் சேதமடைந்தது

Update: 2021-09-15 12:29 GMT

திண்டுக்கல்லில் டாஸ்மாக் கடை அருகே தீப்பிடித்து எரியும் கார்

திண்டுக்கல் அருகே உள்ள செட்டிநாயக்கன்பட்டி இ பி காலனி பகுதியில் அரசு மதுபானக்கடை செயல்படுகிறது. திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே உள்ள தொப்ப நாயக்கன் பட்டியைச் சேர்ந்த திருப்பதி என்ற கார் வியாபாரி தொழில் சம்பந்தமாக  இன்று திண்டுக்கல் வந்துள்ளார்.

இந்நிலையில், அவர் விற்பனைக்காக கொண்டு சென்ற ஆம்னி வேனில் அரசு மதுபான கடை அருகே வந்துள்ளார். அப்போது காரை நிறுத்திவிட்டு, காரை விலைக்குக் கேட்டவரிடம்   தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதையடுத்து மீண்டும் காரை ஸ்டார்ட் செய்த போது திடீரென காரில் தீப்பிடிக்க தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த திருப்பதி காரிலிருந்து வெளியேறினார்.கேஸ் சிலிண்டர் பொருத்தப்பட்ட கார் என்பதால் கார் வேகமாகத் தீப்பிடித்து எரிய தொடங்கியது.

கார் தீ பிடிக்க தொடங்கியதால், மதுபான கடையில் மது வாங்கிக் கொண்டிருந்த மது பிரியர்கள் மற்றும் அருகிலுள்ள கடைக்காரர்கள் அனைவரும் தீயை கண்டு ஓட்டம் பிடிக்க தொடங்கினர்.தகவலறிந்து வந்த  திண்டுக்கல்  தீயணைப்பு துறையினர்  சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆமினி வேன் முற்றிலுமாக எரிந்து எலும்பு கூடு போல் காட்சியளித்தது. மதுபான கடை அருகே வேன் தீப்பிடித்து எரிந்ததால் இப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News