பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் சாவு
திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் குளம் அருகே தலையில் அடிபட்டு நீரில் மூழ்கிய நிலையில் வாலிபர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் அனுமந்த நகர் பாலகிருஷ்ணாபுரம் செல்லும் சாலையில் ராஜலட்சுமி நகர் அருகே உள்ள குளக்கரை அருகே அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் இருந்தது.
தகவல் அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்ட் அருண் கபிலன்,தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் தெய்வசிகாமணி புரத்தைச் சேர்ந்த சோட்டு (எ) சதீஸ் (வயது 32) என்பதும் சென்ட்ரிங் வேலை செய்து வருவதும் தெரியவந்தது.
இதையடுத்து தாலுகா போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சோட்டு தலை பகுதியில் அடிபட்டு ரத்த காயங்கள் இருப்பதால் இவர் நிலை தடுமாறி கீழே விழுந்து இறந்தாரா அல்லது யாராவது தாக்குதல் நடத்தி கொலை செய்து உள்ளார்களா என்ற கோணத்தில் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.