மூட்டு ஜவ்வு மாற்று சிகிச்சையை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக டிரைவர் ஒருவருக்கு மூட்டு ஜவ்வு மாற்று சிகிச்சையை செய்து டாக்டர்கள் சாதனை

Update: 2021-07-21 15:54 GMT

மாதிரி படம்  

திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு ஜப்பான் நாட்டின் ஜைக்கா நிறுவனம் ரூ.28 லட்சத்தில் மூட்டு ஜவ்வு மாற்று நவீன கருவி (ஆர்த்தோ ஸ்கோப்பி கருவி) ஒன்றை வழங்கியுள்ளது. இந்த கருவி மூலம் விபத்தில் கால் மூட்டின் ஜவ்வு சேதம் அடைந்தால், அதனை முற்றிலும் அகற்றிவிட்டு புதிய ஜவ்வை பொருத்தலாம். இந்த நவீன கருவி மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் இதுவரை அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை.

இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடி அருகே உள்ள பண்ணைபட்டியை சேர்ந்த டிரைவர் பாலமுருகன் (வயது 27). இவர், இடது கால் மூட்டு சேதம் அடைந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள் மூட்டு பகுதியில் ஜவ்வு முற்றிலும் சேதம் அடைந்திருப்பதை கண்டறிந்தனர். அவருக்கு நவீன கருவி மூலம் மூட்டு ஜவ்வை மாற்றி அறுவை சிகிச்சை செய்வது என அரசு மருத்துவமனை டாக்டர்கள் முடிவு செய்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம், திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி டீன் விஜயகுமார், கண்காணிப்பாளர் சுரேஷ்பாபு ஆலோசனையின்படி மருத்துவ கல்லூரி பேராசிரியர் டாக்டர் கார்த்திக் ராஜா தலைமையில் டாக்டர்கள் முரளிதரன், சத்யபிரகாஷ் ஆகியோர் பாலமுருகனுக்கு மூட்டு ஜவ்வு மாற்று நவீன கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர். இது சுமார் 2 மணி நேரம் நடந்தது. இதில் பாலமுருகனின் இடது கால் மூட்டில் சேதம் அடைந்த ஜவ்வு முற்றிலும் அகற்றப்பட்டு, முதல் முறையாக புதிய ஜவ்வை பொருத்தி அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இதற்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் லலித்குமார் செய்திருந்தார். அறுவை சிகிச்சைக்கு பின்பு பாலமுருகன் நலமாக உள்ளார். இந்த நவீன அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் ரூ.1 லட்சம் முதல் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் முற்றிலும் இலவசமாக இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News