தனிமையில் வாடிய 59 வயது தாய்; 2 வது திருமணம் செய்து வைத்த மகள்

தனது தாய் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த மகள், தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்தார்.

Update: 2022-08-20 14:12 GMT

கேரள மாநிலம், திருச்சூரில் கணவனை இழந்த தனது தாய் தனிமையில் தவிப்பதை உணர்ந்த மகள், தாய்க்கு 2-வது திருமணம் செய்து வைத்தார்.

கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் ரதிமேனன் (வயது 59). இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது இரண்டு மகள்களுக்கும் திருமணமான நிலையில், ரதிமேனன் தனிமையில் வசித்து வந்தார்.

இந்நிலையில் வீட்டில் யாருமின்றி, தனது தாய் தனிமையில் தவித்து வருவதை உணர்ந்த ரதிமேனனின் மகள் பிரசிதா, கண்டிப்பாக தனது தாயாருக்கு ஒரு துணை வேண்டும் என்று எண்ணினார். இதற்காக தனது தாய்க்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். இதற்காக தகுந்த மணமகனை தேட ஆரம்பித்தார். இந்த சூழலில் அதே பகுதியை சேர்ந்த மனைவியை இழந்து தனிமையில் வாழ்ந்து வந்த திவாகரன் (63) என்பவர்தான், தனது தாய்க்கு ஏற்ற துணை என்று பிரசிதா முடிவு செய்தார். இரண்டு மகள்களுக்கு தந்தையான திவாகரன் வேளாண் பல்கலைக்கழகத்தில் பணி செய்து ஓய்வு பெற்றவர்.

அவரிடம் தனது தாயின் தனிமை பற்றியும், அவருக்கு ஒரு துணை வேண்டும் என்று, உருக்கமாக கூறினார் பிரசிதா. இதனை புரிந்து கொண்ட திவாகரன் இரண்டாவது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தார். திவாகரனின் மனநிலை குறித்து அவரது இரண்டு பெண்குழந்தைகளிடமும் பிரசிதா பேசினார். அவர்களும் தந்தையின் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

இதை தொடர்ந்து, தனது தாய் ரதிமேனனின் சம்மதத்தை பெற்ற அவர், திருச்சூர் திருவம்பாடி கோவிலில் இருவருக்கும் உற்றார், உறவினர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்தி முடித்தார்.

தாய்க்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்த மகள் பிரசிதா கூறியதாவது:

எனது அம்மாவுக்கு நாங்கள் இரண்டு பெண் குழந்தைகள். அப்பா உயிரோடு இருக்கும்போதே எங்கள் இருவருக்கும் திருமணமாகிவிட்டது. நாங்கள் அவரவர் கணவர் வீட்டில் வாழ்ந்து வருகிறோம். அப்பா திடீரென்று மரணம் அடைந்ததால் அம்மா தனிமையானார். எங்களுக்கும் கணவர், குழந்தைகள் என ஆனதால் அம்மாவை அடிக்கடி நேரில் வந்து பார்க்க முடியவில்லை. அம்மாவின் தனிமை நிலையை போக்க வேண்டும் என்று, திருமண செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது, என்றார். 

Similar News