நாமக்கலில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் திருத்தம் – 3 மையங்களின் கண்காணிப்பு

மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்த 3 மையம்: கண்காணிக்க முகாம் அலுவலர்கள் நியமனம்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களைத் திருத்துவதற்காக மூன்று மையங்கள் அமைக்கப்பட்டு, அவற்றைக் கண்காணிக்க முகாம் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 3-ஆம் தேதி தொடங்கி, வரும் 25-ஆம் தேதி வரையும், பிளஸ் 1 பொதுத்தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கி, 27-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. நாமக்கல் மாவட்டத்தில் நடப்பாண்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வை 18,461 மாணவர்களும், பிளஸ் 1 பொதுத்தேர்வை 18,966 மாணவர்களும் எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் என மொத்தம் 86 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்களைச் சேகரிக்க இரண்டு மையங்களும், விடைத்தாள் திருத்துவதற்கு மூன்று மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தேர்வுகள் அனைத்தும் முடிந்த பின், பண்டலிங் செய்யப்பட்ட விடைத்தாள்கள், அதற்காக நியமிக்கப்பட்டுள்ள வழித்தட அலுவலர்கள் மூலம், காவல்துறை பாதுகாப்புடன், தனி வாகனத்தில் விடைத்தாள் சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு செல்லப்படும். நாமக்கல் - திருச்செங்கோடு சாலையில் உள்ள சி.எம்.எஸ். கல்லூரி வளாகத்தில் உள்ள ஸ்பைரோ சி.பி.எஸ்.இ. பள்ளி வளாகம், திருச்செங்கோடு வித்யாவிகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி என இரண்டு இடங்களில் விடைத்தாள் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, விடைத்தாள்கள் அங்கு பெறப்பட்டு வருகின்றன.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், "நடப்பாண்டு நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள் இரண்டு இடங்களில் சேகரிக்கப்படுகின்றன. தமிழ், ஆங்கில தேர்வு முடிந்த பின், பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள்கள், சேலத்தில் உள்ள பொதுவான மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். தொடர்ந்து, மற்ற தேர்வு விடைத்தாள்கள் அடுத்தடுத்து அனுப்பி வைக்கப்படும்.
சேலத்தில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த விடைத்தாள்கள் கொண்டு வரப்படும். அங்கிருந்து விடைத்தாள்கள் கலக்கப்பட்டு, தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்வேறு விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, மதிப்பீடு செய்யப்படும். இதன் மூலம், எந்த மாவட்டத்தின் விடைத்தாள், எந்த மையத்திற்குச் செல்கிறது என்பது யாருக்கும் தெரியாது" என்று தெரிவித்தனர்.
## மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணி
நாமக்கல் மாவட்டத்தில், இந்தாண்டு விடைத்தாள்களைத் திருத்துவதற்காக, நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய இடங்களில் மூன்று மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வுத்துறை இயக்குனர் அறிவிக்கும் நாளில் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி துவங்கும். இந்த மையங்களின் முகாம் அலுவலராக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
முகாம் அலுவலர்களின் மேற்பார்வையில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படும். ஆசிரியர்களின் வசதிக்காக இந்தாண்டு, மூன்று மையங்களில் விடைத்தாள் திருத்தப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu