குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்

குழந்தைகள் மையங்களில் 2 முதல் 5 வயது    குழந்தைகளை சேர்த்து பயன்பெறலாம்
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்ட குழந்தைகள் மையங்களில், 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இந்த மையங்களில் சேர்த்து பயன்பெற கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாமக்கல்,

இது குறித்து, கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம், 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் முழுமையான வளர்ச்சியினை மேம்படுத்தும் வகையில் நமது மாவட்டத்தில் செயல்படும் 1,599 குழந்தைகள் மையங்களில் சத்துமாவு, ஊட்டச்சத்துடன் கூடிய கலவை உணவு மற்றும் முன்பருவக் கல்வி போன்றவை வழங்கப்படுகின்றது. குறிப்பாக 2 வயது முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு, குழந்தைகள் மையத்தில் முறைசாரா முன்பருவக் கல்வி, செய்கைப் பாடல், கதை, விளையாட்டுக் கல்வி, உபகரணங்கள் ஆகியவற்றின் மூலம் அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் குழந்தைகளின் உடல். மொழி, மனம், சமூகம் மற்றும் அறிவு வளர்ச்சிக்கு தேவையானவற்றை ஆடிப்பாடி விளையாடு பாப்பா எனும் சிறப்பு பாடத் திட்ட திருப்புதலுடன் 12 மாதங்களுக்கும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

மேலும், குழந்தைகளின் வளர்ச்சி கண்காணிக்கப்பட்டு பள்ளிச் செல்ல ஆயத்தப்படுத்தப்படுகின்றனர். அங்கன்வாடி பணியாளர்கள் தற்போது வீடுகள் தோறும் குழந்தைகள் சேர்க்கை பணி மேற்கொண்டு வருகிறார்கள். எனவே பெற்றோர்கள் தங்களது 2 முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளை, ஜீன் மாதத்தில் குழந்தைகள் மையத்தில் தவறாது சேர்த்திட வேண்டும். குழந்தைகள் மையங்களில், குழந்தைகளுக்கான ஆதார் அட்டை வழங்கும் பணியும் நடைபெற்று வருவதால், அச்சேவையையும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Next Story