கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்

கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள்    ஒரு வாரத்தில் பதிவு செய்ய வேண்டும்: கலெக்டர்
X

பைல் படம் 

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கிரஷர், எம்.சாண்ட் உற்பத்தி நிறுவனங்கள் ஒரு வாரத்திற்குள் விண்ணப்பித்து பதிவு சான்று பெற வேண்டும் என கலெக்டர் அறிவித்துள்ளார்.

நாமக்கல்,

இது குறித்து, நாமக்கல் கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர், ராசிபுரம், திருச்செங்கோடு, பரமத்திவேலூர் மற்றும் குமாரபாளையம் ஆகிய தாலுகாக்களில் கிராவல், சாதாரணக் கற்கள், கிரானைட் குவார்ட்ஸ் மற்றும் பெல்ஸ்பர் ஆகிய கனிமங்களுக்கு குவாரி குத்தகை லைசென்ஸ் வழங்கப்பட்டு, குவாரிப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ள குவாரிகளிலிருந்து வெட்டியெடுத்து அரசுக்கு உரிய கட்டணங்கள் செலுத்தி, கனிமங்களை வாகனங்களில் எடுத்துச் செல்வதற்காக, கடந்த ஏப். 15 முதல் ஆன்லைன் மூலம் பர்மிட்டுகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

அனுமதியின்றி அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் நோக்கில் கனிமங்கள் எடுத்துச் செல்லுதல், சேமித்து வைத்தல் மற்றும் கனிமங்களான ஜல்லி, எம்.சாண்ட், பி.சாண்ட் மற்றும் இதர வகை கிரஷர் பொருட்களாக தயார் செய்து எடுத்துச் செல்வதை கண்காணித்து தடுக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள அனைத்து கிரஷர், எம்.சாண்ட் யூனிட் உரிமையாளர்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவர்கள், உரிய விவரங்களுடன் விண்ணப்பித்து ரூ.10,000-ஐ கட்டணமாக செலுத்தி. அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை பதிவு சான்று கோரி மாவட்ட கலெக்டருக்கு ஒரு வாரத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒரு வாரத்தில், விண்ணப்பித்து பதிவு சான்று பெற தவறும் கிரஷர், எம்.சாண்ட் யூனிட் உரிமையாளர்கள் மற்றும் கனிமங்கள் சேமித்து வைத்துள்ள முகவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story