திருத்தணி பஜார் வீதியில் திறந்திருந்த மளிகை கடைக்கு வட்டாட்சியர் சீல்!

திருத்தணி பஜார் வீதியில் முழு ஊரடங்கின் போது மளிகை கடை திறந்து விற்பனை செய்த கடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்து அதிரடி; முக கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு அபராதம் விதித்தும் எச்சரித்தார்.

Update: 2021-06-02 14:09 GMT

திருத்தணியில் ஊரடங்கை மீறி செயல்பட்ட மளிகைகடைக்கு வட்டாட்சியர் சீல் வைத்த காட்சி.

தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால் தமிழகத்தில் முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்தது. பால், மருந்தகம், பெட்ரோல் நிலையம் தவிர வேறு எந்த எந்த கடைகளும் திறக்க அனுமதி கிடையாது என அரசு அறிவித்துள்ளது. வீடுகளுக்கே சென்று காய்கறி, மளிகை பொருட்கள் விற்பனை செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசின் தடை உத்தரவை மீறி திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பஜார் வீதியில் கௌரிசங்கர் என்பவர் மளிகை கடையை திறந்து விற்பனை செய்வதாக திருத்தணி வட்டாட்சியர் ஜெயராணிக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, விரைந்து வந்து பார்த்தபோது அவர் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. ஏற்கனவே 2 முறை எச்சரித்தும் மீண்டும் கடை திறந்து விற்பனை செய்ததால் திருத்தணி வட்டாட்சியர் மளிகை கடைக்கு சீல் வைத்து எச்சரித்தார்.

இதனையடுத்து 3 மாதங்களுக்கு கடை திறக்க அனுமதி கிடையாது என எச்சரிப்பு செய்தார். மேலும் திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முக கவசம் அணியாமல் சாலைகளில் சுற்றித் திரிந்த 20க்கும் மேற்பட்டோருக்கு 200 ரூபாய் வீதம் அபராதம் விதித்தும் எச்சரித்து அனுப்பினார். அத்தியாவசிய தேவைகளின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது எனவும் அவர் எச்சரித்தார்.

Tags:    

Similar News