திருவள்ளூர் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
திருவள்ளூர் அருகே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
பள்ளி அருகே அபாயகரமான குழிகள்.
ஆர்.கே. பேட்டை அருகே அரசு பள்ளிக்கு சுற்றுச்சூழல் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்களில் மழைநீர் தேங்கி சேரும் சகதியுமாக இருப்பதால் பள்ளிக்கு சென்று வர மாணவர்கள் அவதியடைந்து வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை அருகே அமுதாரெட்டி கண்டிகையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூபாய் 5 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு பள்ளியை சுற்றி சுமார் 4 அடி ஆழத்தில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் லேசான மற்றும் மிதமான மழையால் பள்ளங்களில் மழை நீர் தேங்கியும் சேரும் சகதியுமாக இருப்பதால் பள்ளிக்கு சென்று வர மாணவர்கள் அவதிப்படுகின்றனர். பள்ளி வளாகத்தில் விளையாடும் போது சிறுவர்கள் பள்ளத்தில் விழுந்து விடும் அபாயம் நிலவி வருவதால், மாணவர்களின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.
உடனடியாக பள்ளங்களில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றி சுற்றுச்சுவர் எழுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். பள்ளங்களில் தேங்கி நிற்கும் மழைநீரில் மாணவர்கள் தவறி விழுந்தால் அவர்கள் உயிர் இழக்க கூடிய அபாயம் உள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு முன்பாக பள்ளிக்கு கட்டவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆக உள்ளது.