கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை

கொசஸ்தலை ஆற்றில் மணல் கொள்ளையை தடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2023-07-01 03:30 GMT

கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்கப்பட்ட பகுதி.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த, ஆற்காடு குப்பம் அருகே பங்களா தோட்டம் என்ற பகுதியில் கொசஸ்தலை ஆறு செல்கின்றது. இந்த ஆற்றில் இரவு நேரங்களில் மணல் கொள்ளை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

அந்த கிராமத்தில் உள்ள மாந்தோப்பு வழியாக மண்சாலை அமைத்து ஜேசிபி எந்திரங்கள் மூலம் மண் அள்ளப்பட்டு லாரிகளில் அனுமதி இன்றி மணல் கடத்துவதாக பொதுமக்கள் சார்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கொசஸ்தலை ஆற்றில் இருந்து மணலை திருடி செல்வதால் பங்களா தோட்டம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற மக்களுக்கு நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன், இந்த ஆற்றின் நீரை நம்பி நூற்றுக்கணக்கான விலை நிலங்களில் விவசாயிகள் பருவத்திற்கு ஏற்ப விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்த மணல் கடத்தல் காரணத்தினால் விவசாயமும் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாயமும் இருக்கிறது. எனவே இரவு நேரங்களில் பங்களாதோட்டம் பகுதியில் நடைபெறும் மணல் கொள்ளையை கனகம்மா சத்திரம் காவல்துறையினர் தடுத்து நிறுத்திட வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இது குறித்து விவசாயிகள் தெரிவிக்கையில், கொசுத்தலை ஆற்றில் இரவு நேரங்களில் தொடர் மணல் கொள்ளை நடைபெற்று வருகிறது. இந்த மணல் கொள்ளை தடுக்க பலமுறை சம்பந்தப்பட்ட காவல்துறைக்கும் வருவாய்த்துறைக்கு கோரிக்கை வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே தற்போதாவது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நிலத்தடி நீரும் விவசாயத்திற்கு தேவையான நீரும் பாதிக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.

Tags:    

Similar News