திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி கலெக்டர் ஆய்வு

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவையொட்டி கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.;

Update: 2023-08-01 12:50 GMT

திருத்தணி முருகன் கோவிலில் மாவட்ட ஆட்சியர் அல்பி ஜான் வர்கீஸ் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

திருத்தணி முருகன் கோவிலில், 7 ம் தேதி முதல், 11 ம் தேதி வரை ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத்திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு விழாவிற்கு வருகை தரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை குறித்து மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாமல் ஆந்திரா, கர்நாடகா,புதுச்சேரி, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மொட்டை அடித்து காவடி எடுத்து வழிபாடு நடத்துவார்கள்.

இந்த நிலையில் வருகின்ற 7ம்தேதி முதல் 11 ஆம் தேதி வரை ஆடி கிருத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் விழாவிற்கு வரும் லட்சக்கணக்கான பக்தர்களுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தருவது குறித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாண், கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் ஸ்ரீதரன், துணை ஆணையர் விஜயா, வருவாய் கோட்டாட்சியர் தீபா ஆகியோர் மேல்திருத்தணி நல்லாங்குளம், மலையடி வாரத்தில் உள்ள சரவணப்பொய்கை, தற்காலிக பேருந்து நிலையங்கள், மலைக்கோவில் போன்ற இடங்களில் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து திருவள்ளூர் கலெக்டர் அல்பி ஜான் வர்கீஸ்கூறியதாவது:-

ஆடிக்கிருத்திகை விழாவிற்கு கடந்த ஆண்டை விட கூடுதலாக பக்தர்கள் வருவார்கள் என்பதால் கூடுதல் வசதிகள் செய்து வருகிறோம். பக்தர்கள் வசதிக்காக, 480 சிறப்பு பேருந்துகள், மூன்று மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. 48 குளியல் அறைகள், 110 கழிப்பறைகள், நகராட்சி சார்பில், 250 துப்புரவு தொழிலாளர்கள், கோவில் நிர்வாகம் சார்பில், 450 துப்புரவு தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுவர். சுகாதார தறையின் மூலம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்படும்.

கோவில் வளாகம் தேவஸ்தான விடுதிகள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் கூடும் இடங்கள் என மொத்தம், 150 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும். பக்தர்கள் நெரிசல் இல்லாமல் தரிசிப்பதற்கு க்யூ லைன் அமைத்து பாதுகாப்பு அளிக்கப்படும். ஆம்புலன்ஸ் வாகனம், பக்தர்கள் புகார்கள் தெரிவிக்க கட்டணம் இல்லா தொலைபேசி எண் அறிவிக்கப்படவுள்ளது. இதில் வாட்ஸ்ஆப் மூலம் புகார் அனுப்பலாம். மொத்தத்தில் ஆடிக்கிருத்திகை விழா முழு பலத்த பாதுகாப்புடன் நடத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News