கோவில் கும்பாபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்தவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு

திருத்தணி அருகே படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய சென்றவரை தாக்கிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2024-09-17 07:15 GMT

படம்

திருத்தணி அருகே கோவில் கும்பாபிஷேகத்தில் சாமி தரிசனம் செய்ய சென்றபோது கணவரை தாக்கிய 3 பேர் மீது காவல் நிலையத்தில் மனைவி புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம், ஆர்கே பேட்டை அடுத்த சின்ன நாக பூண்டி சித்தூர் சாலை பகுதியில் வசித்து வருபவர் சேகர் (வயது 49). கூலித் தொழிலாளி. இவர் கடந்த 15-ஆம் தேதி அதே கிராமத்தில் உள்ள படவேட்டம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்ய சென்றார். அப்போது அங்கு அதே கிராமத்தைச் சேர்ந்த முருகேசன்(வயது 65), சதீஷ் ( வயது 34),சுரேஷ் ( வயது 32) ஆகியோர் சேகரை தரக்குறைவாக பேசி உருட்டுக் கட்டையாலும், கைகளாலும் அடித்து கீழே தள்ளி கால்களால் வயிற்றில் எட்டி,எட்டி உதைத்துள்ளனர்.

இந்த விவகாரத்தை வீட்டில் சொல்லாமல் சேகர் தீராத வயிற்று வலியில் அவதிப்பட்டு துடித்துள்ளார்.அப்போது குடும்பத்தினர் கேட்டபோது நடந்த தாக்குதல் பற்றி சேகர் தெரிவித்தார்.வலியால் அவதிப்பட்ட சேகரை மீட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.அங்கு முதல் சிகிச்சைக்குப்பின் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே கணவரை அடித்து துன்புறுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவரது மனைவி நீலா ஆர்.கே.பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News