ஆந்திராவிலிருந்து கஞ்சா கடத்தி வந்து திருத்தணியில் விற்பனை: இளைஞர் கைது!

ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்து விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Update: 2021-06-12 14:46 GMT

கஞ்சா கடத்தியதாக கைதான இளைஞர்.

ஆந்திர மாநிலம் நகரி அடுத்த போஜி குப்பம் பகுதியில் இருந்து கஞ்சா கடத்தி வந்து திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி பகுதியில் விற்பனை செய்வதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அவரது உத்தரவின்பேரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் உதவி ஆய்வாளர் சுதாகர் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

இந்த நிலையில் திருத்தணி அரசு கலைக்கல்லூரி அருகே உதவி ஆய்வாளர் சுதாகர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது அங்கு 1 கிலோ 600 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துகொண்டிருந்த திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் கிராமத்தை சேர்ந்த சர்குணம் (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சர்குணம் மீது ஏற்கனவே கொலை, கொலை முயற்சி உட்பட பல்வேறு வழக்குகள் திருத்தணி காவல்நிலையத்தில் நிலுவையில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் திருத்தணி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்ததாக ஏழரைக் கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்ததால் மேலும் காவல்துறையினரின் கண்காணிப்பு தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News