அரசிக்கு வரிவிதிப்பைக் கண்டித்து சிறை நிரப்பும் போராட்டம்:வணிகர் சங்க பேரவை முடிவு

வரி வசூலிப்பது மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் இல்லாமல் சதி திட்டம் போட்டு செய்வது போல் செய்கிறார்கள்

Update: 2023-04-11 03:45 GMT

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது.

அரிசி மீதான வரிவிதிப்புக்கு கண்டனம் தெரிவித்து மே 5-இல் நடக்கும் மாநாட்டுக்கு பின் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

மே 5-ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பக்கத்தில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சில்லறை வணிகர்களின் உரிமை மீட்பு மாநில 40-வது மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் நடைபெற்றது.

சங்கத்தலைவர் ஷேக் முகமது தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் தலைவர் வெள்ளையன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அப்போது, அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ள மாநாட்டில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என நிர்வாகிகளை அவர் கேட்டு கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த காலத்திலும் அரிசிக்கு வரி விதிப்பு இருந்தது கிடையாது. இப்போது அரிசிக்கு வரி கொண்டு வந்து விட்டார்கள். மத்திய அரசுக்கு ஒரு பங்கும், மாநில அரசுக்கு ஒரு பகுதியும் தருவதாகவும், வசூலிப்பது மத்திய அரசு, மாநில அரசு என்றெல்லாம் இல்லாமல், சதித்திட்டம் போட்டு செய்வது போல் செய்கிறார்கள்.

இதையெல்லாம் எதிர்த்து முறியடித்து மே 5-இல் நடக்கும் மாநாட்டுக்கு பின்னர், தேவைப்பட்டால் போராட்டம் நடத்தி வெற்றி பெறுவோம்.  தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை எப்போதும் அமைதியான வழியில் போராடும். ஆனால், இப்போதும் அமைதி வழியில் போராட வேண்டும் என்பது கதைக்கு உதவாத ஒரு செயல் என்பதால் சிறைக்கு செல்கின்ற, சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.




Tags:    

Similar News