அரசாணை ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கைது..!

தமிழகத்தில் அரசாணை 243ஐ ரத்து செய்ய கோரி பொன்னேரியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-07-04 10:45 GMT

பொன்னேரி அருகே அரசாணை 243ஐ ரத்து செய்யக்கோரி மறியலில் ஈடுபட முயன்ற தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பதவி உயர்வு பணி மாறுதலில் பழைய நடைமுறையே பின்பற்ற வலியுறுத்தல்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சோழவரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் 200க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் முன்னுரிமை ஆகியவற்றை பாதிக்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை 243ஐ ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது தொடக்கக் கல்வித் துறையில் பதவி உயர்வு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் நிலையில் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும் வரையில் அறிவிக்கப்பட்டுள்ள கலந்தாய்வு பொது மாறுதலை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், பொது மாறுதல் கலந்தாய்வு அட்டவணையினை மாற்றி அமைத்து ஒன்றிய அளவில் மட்டுமே கலந்தாய்வினை நடத்திட வேண்டும் என போராடிய ஆசிரியர்கள்  கேட்டுக்கொண்டனர்.

தொடர்ந்து பள்ளியின் எதிரே சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற இருநூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. 

Tags:    

Similar News