பாதிக்கப்பட்ட மீனவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய சட்டமன்ற உறுப்பினர்

பழவேற்காட்டில் தீக்கிரையான மீனவர்களின் வலைகளை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Update: 2024-07-25 01:15 GMT

மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ

பழவேற்காட்டில் நள்ளிரவில் தீக்கிரையான மீன்பிடி வலைகளை நேரில் பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ காலில் விழுந்து கதறிய மீனவ பெண்கள். உரிய இழப்பீடு வழங்கிட கோரிக்கை.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பழவேற்காடு அடுத்த அங்கங்குப்பம் மீனவ கிராமத்தில் நள்ளிரவில் மீனவர்கள் மீன்பிடி வலைகள் தீயில் கருகி சேதமானது. சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலைகள் தீயில் கருகி நாசமான நிலையில் பொன்னேரி எம்எல்ஏ துரை.சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டு மீனவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அங்கு வந்த மீனவ பெண்கள் தங்களது வாழ்வாதாரமாக விளங்கும் மீன்பிடி வலைகள் தீயில் கருகியதால் செய்வதறியாது தவிப்பதாக எம்எல்ஏ காலில் விழுந்து கதறினர். தொடர்ந்து மீனவர்களுக்கு ஆறுதல் கூறிய எம்எல்ஏ துரை.சந்திரசேகர் இது தொடர்பாக இழப்பீடு வழங்கிட கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் பழவேற்காடு சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் அவ்வப்போது தொடரும் மீன்பிடி வலைகள் தீ விபத்து குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு காவல்துறைக்கும் வலியுறுத்தினார். தீக்கிரையான மீன்பிடி வலைகளால் பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு ஆறுதல் கூற வந்த எம்எல்ஏ காலில் விழுந்து மீனவ பெண்கள் கதறிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News