ஆரணி பகுதியில் மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளால் ஆபத்து

ஆரணி பகுதியில் மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளால் ஆபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

Update: 2022-12-29 07:04 GMT

ஆரணி பகுதியில் உள்ள மின் கம்பங்களில் செடி கொடிகள் படர்ந்துள்ளன.

ஆரணி அருகே மின் கம்பங்களில் படர்ந்துள்ள செடி கொடிகளை மாதாந்திர பணியின்போது மின் வாரிய ஊழியர்கள் அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட ஆரணி பேரூராட்சியில் சுமார் 15,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள சில மின்கம்பங்கள் பழுதடைந்து அவற்றில் செடி கொடிகள் வளர்ந்து வருகிறது. மழைக்காலங்களில் பச்சை செடிகள் என்பதால் மின்சாரம் இவற்றிலும் இருக்கும் என்பதால் அப்பகுதியில் பெரியவர்களோ அல்லது சிறு குழந்தைகள் தெரியாமல் இவற்றை தொட்டுவிட்டால் மின்சாரம் பாய்ந்து உயிர்ப்பலி வாங்கும்  அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது.

மாதத்தில் ஒருமுறை மின்வயர்களில் பராமரிப்பு பணிகளை மின்சார வாரிய அதிகாரிகள் செய்வது வழக்கம். இப்பணியை மேற்கொள்ளும் போது குறிப்பிட்ட அந்தந்த பகுதிகளில் மின்சாரம் தற்காலிகமாக சுமார் ஆறு மணி நேரத்திற்கு மேலாகவே துண்டித்து மின் கம்பிகள் செல்லும் பாதையில் உள்ள மரங்களை அகற்றுவதும் கம்பங்களில் உள்ள செடி கொடிகளை அகற்றுவது உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் செய்வது வழக்கம்.

ஆனால் பராமரிப்பிற்கு அப்பாற்பட்டு மின்வாரியம் சில இடங்களில் கவனிக்காமல் இதுபோன்று மின்கம்பங்களில் செடி கொடிகள் வளர்ந்து வருவதால் இந்த கம்பங்களை தொட்டால் மின்சாரம் பாய்ந்து உயிர் போகும் அபாயமும் உள்ளது. எனவே ஆரணி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் நிலை இப்படி தான் இருக்கின்றது என்று ஆரணி பகுதியில் வாழும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே மின்வாரிய அதிகாரிகள் இதனை கண்டுகொண்டு இதுபோன்று பழுதடைந்த கம்பங்களை கண்டறிந்து அதில் உள்ள செடி கொடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Tags:    

Similar News