மாண்டஸ் புயல் கரை கடந்ததை தொடர்ந்து பழவேற்காட்டில் இயல்புநிலை

மாண்டஸ் புயல் கரை கடந்ததை தொடர்ந்து பழவேற்காட்டில் இயல்புநிலை திரும்பியது

Update: 2022-12-11 04:00 GMT

பைல் படம்.

தென்மேற்கு வங்க கடலில் மாண்டஸ் புயல் உருவானதை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில் மீனவ மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த நான்கு நாட்களாக மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவில்லை.அவர்களது மீன்பிடி படகுகள் கரையோரம் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. கனமழை காரணமாக மீனவ மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி கிடந்தனர்.குளத்துமேடு, கோரைக்குப்பம் மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

நேற்று நள்ளிரவு மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையை கடந்ததை தொடர்ந்து பழவேற்காட்டில் மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. கடல் அலைகளின் சீற்றம் நேற்றைவிட இன்று கொஞ்சம் குறைவாகவே காணப்படுகிறது. மீனவ சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் வழக்கம்போல கடற்கரையில் கபடி விளையாடி கொண்டிருப்பதை காண முடிகிறது.

சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் மணலில் வீடுகட்டி குதூகலத்துடன் விளையாடி மகிழ்கின்றனர்.இது ஒருபுறமிருக்க மறுபுறம் ஆண்டார்மடம் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மீனவ மக்கள் வருவாய் துறையினர் ஏற்பாடு செய்த அரசுப்பேருந்துகளில் வீடுகளுக்கு திரும்பி செல்வதையும் காண முடிகிறது. மொத்தத்தில் மாண்டஸ் புயலுக்கு பிறகு பழவேற்காடு பகுதியில் முழுமையாக இயல்புநிலை திரும்பியுள்ளது.

Tags:    

Similar News