ஆரணி ஆற்றில் தற்காலிக பாலம் உடைந்தது - போக்குவரத்து நிறுத்தம்

ஆரணி ஆற்றில் மீண்டும் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக ஊத்துக்கோட்டை-திருவள்ளூர் இடையிலான ஆரணி ஆற்றில் போடப்பட்ட தற்காலிக பாலம் உடைந்தது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

Update: 2021-01-07 03:15 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் இருந்து திருவள்ளூருக்கு செல்ல தற்காலிக தரைப்பாலம் ஏற்கனவே போடப்பட்ட நிலையில், புரவி புயல் காரணமாக பெய்த மழையில் இந்த தரைப்பாலம் பாலம் உடைந்தது. இதனால் அங்கு கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் மீது ஆபத்தான முறையில் பொது மக்கள் கடந்து சென்றனர்.பின்னர், மேம்பாலத்தின் அருகில் புதியதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. அது கடந்த டிசம்பர் 25-ஆம் தேதி முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்தது.

இந்த நிலையில் நேற்று பெய்த மழை காரணமாக நந்தனம் காட்டுப்பகுதி, சுருட்டப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் தற்போது போடப்பட்டுள்ள புதிய தரைப்பாலம் மூழ்கியது. இதனால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. 40 கிராமங்களில் இருந்து செல்லக்கூடிய கிராம மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக தற்போது கட்டப்பட்டு வரும் உயர்மட்ட மேம்பாலத்தின் மீது ஏறி ஆபத்தான முறையில் கடந்து வருகிறார்கள். அவர்களை காவல் துறையினர் தடுத்து அறிவுறுத்தி வருகிறார்கள். அவர்கள் இறங்கி ஏறுவதற்கு ஏணி அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News