திருமுல்லைவாயிலில் உதயநிதி ஸ்டாலினுக்கு நரிக்குறவர்கள் உற்சாக வரவேற்பு

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி சட்டமன்ற தொகுதி திருமுல்லைவாயலுக்கு வருகை தந்த உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏவுக்கு நரிக்குறவர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2021-07-17 11:52 GMT

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகை தந்த எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சருமான  நாசரின் புதிய அலுவலகம் ஆவடியில் தொடங்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா மற்றும் மாணவ மாணவியருக்கு டாப்(Tab) வழங்கும் விழா கட்சி அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.

இதில் கலந்துகொள்ள திமுக இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் வந்திருந்தார். அப்போது வழிநெடுகிலும் திமுக தொண்டர்கள் ஆங்காங்கே கூடி மேளதாளங்கள் முழங்க அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

அவர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் காலனி அருகே வந்தபோது அங்கு கூடி நின்ற நரிக்குறவர் மக்கள் அவரை வரவேற்கும் வகையில் பட்டாசு வெடித்ததுடன் ஆரவாரம் செய்தனர்.

உடனடியாக வாகனத்தை நிறுத்திய அவர் அவர்களுக்கு நின்று நன்றி செலுத்தினார். அப்போதே நரிக்குறவர் இன மக்கள் முண்டியடித்துக் கொண்டு தாங்கள் உருவாக்கிய பாசி மாலையை அவர் கழுத்தில் அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

பின்னர் தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தும், தங்களை ஓ.பி.சி பட்டியலில் இருந்து எஸ்.சி பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தனர். அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

Tags:    

Similar News