திருவள்ளூரில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைகிறது: அமைச்சர் நாசர் தகவல்!
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் எண்ணிக்கை குறைந்து வருவதாக அமைச்சர் சா.மு. நாசர் தெரிவித்துள்ளார்.;
திருவள்ளூர் கலெக்டர் பொன்னையா தலைமையில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் சா.மு. நாசர், சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி, பூந்தமல்லி, மாதாவரம், மதுரவாயில் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பஞ்சாயத்துகள், பேரூராட்சிகள், மாநகராட்சி, நகராட்சி ஆகிய பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் ஆவடி மாநகராட்சி கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் பொன்னையா தலைமையில் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்தில் சோழவரம், வில்லிவாக்கம், பூந்தமல்லி, எல்லாபுரம் ஆகிய ஒன்றியங்களின் அரசு அதிகாரிகள், ஆவடி மாநகராட்சி, திருவேற்காடு நகராட்சி, திருமழிசை திருநின்றவூர், நாரவாரிக்குப்பம் ஆகிய பேரூராட்சிகள் உள்ளடக்கிய அரசு அதிகாரிகள், வட்டார மருத்துவ அலுவலர்கள் ஆகியோர் பங்தகேற்றனர்.
கூட்டத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கலந்து கொண்டு பேசுகையில், தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட திருவள்ளூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா நோய்த்தொற்று குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே கொரோனா என்னும் சங்கிலியை அறுத்து எறிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் அரசு அதிகாரிகளும் ஒன்றாக கைகோர்த்து செயல்பட்டால், தமிழகத்தில் இந்த கொரோனா நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் காத்துக்கொள்ள முடியும்.
எனவே 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்பதை அரசு அதிகாரிகள் பொது மக்களிடையே வலியுறுத்த வேண்டும். அதே சமயம் அந்தந்தப் பகுதிகளுக்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் கொண்டு சேர்க்கும் பணியையும் சரியாக நடைபெறுகிறதா என்று அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ். சுதர்சனம், ஆ. கிருஷ்ணசாமி காரம்பாக்கம் கணபதி, மாவட்ட ஊராட்சிக் குழுத்தலைவர் மகேஸ்வரி, வில்லிவாக்கம் திமுக ஒன்றிய செயலாளர் துரை வீரமணி, பூந்தமல்லி ஒன்றியக் குழு தலைவர் பூவை ஜெயக்குமார், ஆவடி மாநகராட்சி ஆணையர் நாராயணன், ஆவடி சுகாதாரத் துறை ஆய்வாளர் கூடுதல் பொறுப்பாளர் அப்துல் ஜாபர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.