திருமுல்லைவாயில்: கொரோனா சோதனை என கூறி 5 சவரன் நகை, ரூ.40ஆயிரம் கொள்ளை

திருமுல்லைவாயலில் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறி 5 சவரன் நகை மற்றும் ரூபாய் 40 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Update: 2021-05-24 17:12 GMT
கொள்ளை நடந்த வீட்டின் பீரோ உடைக்கப்பட்டு உள்ளதை காணலாம்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், எஸ்.எம் நகர், காவலர் குடியிருப்பு பகுதியை சார்ந்தவர் தர்மராஜன் (26). இவர், ஆவடி அருகே வீராபுரத்தில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சந்திரலேகா (24). இவர்களுக்கு மதியழகன் (4) என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில், சம்பவத்தன்று மாலை 3மணி அளவில் தர்மராஜன் வீட்டிலிருந்து பணிக்கு சென்றுவிட்டார். அதன் பிறகு, வீட்டில் சந்திரலேகா குழந்தையுடன் இருந்துள்ளார். பின்னர், 4மணி அளவில் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டு சந்திரலேகா வந்து திறந்துள்ளார்.

அப்போது, அவரிடம் 2 வாலிபர்கள் கொரோனா தொற்று நோய் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறி வீட்டுக்குள் வந்துள்ளனர். அப்போது, சந்திரலேகாவின் குழந்தை தூங்கி கொண்டிருந்தது. இதனையடுத்து, அவர்கள் இருவரும் சந்திரலேகாவுக்கு தொற்று பரிசோதனை செய்ய முயன்றனர்.

அப்போது, அவர்களில் ஒருவர் அவரது முகத்தில் கைகுட்டையை வைத்துள்ளார். இதனை அடுத்து, சந்திரலேகா மயங்கி சாய்ந்தார். அதன் பிறகு, அவர்கள் இருவரும் வீட்டு பீரோவை திறந்து அதில் இருந்த 5சவரன் தங்க நகைகள், ரூ.40 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளை அடித்துள்ளனர்.

பின்னர், அவர்கள் இருவரும் அங்கிருந்து நகைகள் பணத்துடன் தப்பி தலைமறைவாகினர். இதன் பிறகு, சிறிது நேரம் கழித்து சந்திரலேகா மயக்கம் தெளிந்து எழுந்து போது, அங்குள்ள படுக்கை அறையில் பீரோ திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து சந்திரலேகா திருமுல்லைவாயில் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் உதவி கமிஷனர் சத்தியமூர்த்தி, இன்ஸ்பெக்டர் அருணாச்சலராஜா ஆகியோர் விரைந்து வந்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News