ஆம்பூர் தோல் குடோனில் தீவிபத்து: தோல் பொருட்கள் எரிந்து சேதம்

ஆம்பூரில் உள்ள தோல் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம்  ரூபாய் மதிப்பிலான தோல்  மற்றும் தோல் பொருட்கள் எரிந்து சேதம்

Update: 2022-02-23 14:35 GMT

தீ அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த புதுமண்டி பின்புறமுள்ள பெத்லகேம் எம்.வி.சாமி நகர் பகுதியில் ரியாஸ், சுப்பான், முருகன் கலீல், உள்ளிட்ட 7 பேர் தோல் குடோன் நடத்தி வருகின்றனர்.

ரியாஸ் என்பவர் குடோனில் இருந்து பின்புறம் பக்கத்தில் கரும்புகை சூழ்ந்து தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென பரவி அனைவரது குடோன் வேகமாக பரவியதால், குடோனில் வைக்கப்பட்டிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான தோல் மற்றும்  தோல் பொருட்கள் எரிந்து சேதமானது.

மேலும் அப்பகுதி மக்கள் தீயை அணைக்க முயற்சி செய்து பலன் அளிக்காததால் ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இதில் 7 குடோனில் வைக்கப்பட்டிருந்த ஏற்றுமதிக்கான தோல் மற்றும் தோல் பொருட்கள் அனைத்தும் முற்றிலுமாக எரிந்தன.  இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த ஆம்பூர் நகர காவல் துறையினர்,  மின்கசிவு காரணமாக அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணங்களில்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News