ஆம்பூர் அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் உயிரிழப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே தோட்டத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-05-10 14:52 GMT

ஆந்திர மாநிலம் அடவி பூதலூர் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரி(45). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சான்றோர்குப்பம் வண்ணாந்துறை பகுதியில் உள்ள தனது மகள் தீபாவின் வீட்டிற்கு வந்திருந்தார்.

ஈஸ்வரி இன்று காலை மகளுக்கு சொந்தமான கேழ்வரகு தோட்டத்திற்கு அறுவடை பணிக்கு சென்றுள்ளார். நேற்று இரவு வண்ணாந்துறை பகுதியில் பெய்த கனமழை காரணமாக தீபாவின் நிலத்திற்கு அருகே சென்ற மின்கம்பி அறுந்து வயலில் கிடந்துள்ளது.

இதனை கவனிக்காத ஈஸ்வரி எதிர்பாராத விதமாக மின்சார கம்பியை மிதிக்கவே, மின்தாக்குதலுக்கு உள்ளாகி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். நீண்ட நேரமாகியும் ஈஸ்வரி வீட்டிற்கு திரும்பாததால், தீபா வயலுக்கு சென்று பார்த்தபோது ஈஸ்வரி வயலில் சடலமாக கிடந்தார்.

இதனால் அதிர்ச்சியடைந்து தீபா, தாயை மீட்க முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் மின்இணைப்பை துண்டித்து தீபாவை மீட்டனர்.

பின்னர் அவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தகவலின் பேரில், ஆம்பூர் டவுன் போலீசார், ஈஸ்வரின் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்

Tags:    

Similar News