ஆம்பூரில் கடத்தப்பட்டதாக நாடகமாடிய வெங்காய வியாபாரி

ஆம்பூரில் சொந்த மாமாவிடம் ரூ 10 லட்சம் கேட்டு, கடத்தப்பட்டதாக வெங்காய வியாபாரி நாடகமாடியது அம்பலமானது

Update: 2021-11-16 15:00 GMT

கடத்தல் நாடகமாடி கைது செய்யப்பட்டவர்கள் 

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மு.க கொல்லை பகுதியை சேர்ந்தவர் ஹசேன் (52) இவர் ஆந்திராவில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து  ஆம்பூர் பஜார் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மொத்த விற்பனை செய்து வருகிறார்.

மேலும் இவரது சகோதரி மகனான  ஹமீத் (27) தனது மாமாவுடன் இணைந்து  வெங்காய விற்பனை  தொழிலில்  ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு மு.க.கொல்லை பகுதியில் உள்ள வீட்டில் இருந்து ஹமீது அருகாமையில் உள்ள மருந்து கடைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்ற நிலையில் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. 

இந்நிலையில் நள்ளிரவு 2 மணியளவில் ஹமீதின் மாமாவான ஹசேனை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், ஹமீதை  கடத்தி உள்ளதாகவும்  10 லட்சம் ரூபாய் பணத்தை தராவிட்டால் ஹமீதை கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர் 2 மணி நேரம் கழித்து தொடர்பு கொண்ட கடத்தல் கும்பல் ஹமீதின்  உடம்பில் கத்தியால் கிழித்து இரத்த காயங்களுடன் ஹமீத் இருப்பதை போல  படங்களை வாட்ஸ் அப் மூலமாக அனுப்பி உள்ளதாக கூறி மிரட்டி உள்ளனர்.

இதனால் அதிர்ந்து போன ஹசேன் இதுகுறித்து இன்று அதிகாலை ஆம்பூர் காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.  உடனடியாக ஆம்பூர் டிஎஸ்பி அலுவலகத்திற்கு வந்த திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன்  உத்தரவின் பேரில் ஆம்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில்  தனிப்படை அமைத்து கடத்தல்காரர்களுக்கு பணத்தை தருவதாக  ஹசேனை கடத்தல்காரர்கள் வரச் சொன்ன இடத்திற்கு காவல்துறையினரும் சாதாரண உடையில் பின் தொடர்ந்து சென்றனர். 

ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில்  கடத்தல் கும்பலை துப்பாக்கி முனையில்  காரோடு சேர்த்து மடக்கி  பிடித்தபோது,  தனது மாமாவான ஹசேனிடம் உள்ள பணத்திற்காக  ஆசைப்பட்டு ஹமீது தனது நண்பர்களை வைத்து தன்னையே கடத்தியதாக நாடகமாடியது கண்டறியப்பட்டது. 

இதனை அடுத்து  கடத்தல் நாடகமாடிய ஹமீதின் நண்பர்களான தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த முகமது சித்திக், பையாஸ், அபீத், அப்ரீத் மற்றும் கடத்தல் நாடகம் ஆடிய ஹமீத் உள்ளிட்ட  5 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில்  மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகியுள்ளன.

நேற்று மாலை ஆம்பூர் அடுத்த வெங்கிலி பகுதியில் சென்று கொண்டிருந்த வெங்காய வியாபாரி அசேன் மீது ஹமீதீன்  நண்பர்கள் சித்திக் மற்றும் அப்ரீத் ஆகியோர் மிளகாய் பொடி தூவி ஹசேனை கடத்த  திட்டமிட்டனர். ஆனால்,  மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் ஹசேனை  கடத்த முயன்றது தோல்வியில் முடிந்தது.  இதனை தொடர்ந்து  பணம் பறிக்க  திட்டம் தீட்டி, தன்னை கடத்தி விட்டு தனது மாமாவிற்கு போன் செய்து மிரட்டலாம் என திட்டம் போட்டுள்லார்.

அதன்படி, நேற்றிரவு  வீட்டிலிருந்து மருந்து கடைக்கு செல்வதாக கூறி விட்டு வெளியே வந்து தனது நண்பர்களுடன் காரில் ஏறி ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று தனது மாமாவிற்கு போன் செய்து கடத்தி விட்டதாக மிரட்டல் விடுத்துள்ளார்.

பின்னர் அசேன் தன்னிடம் பணம் இல்லை எனக் கூறியதால், அடுத்த கட்டமாக  ஹமீது  தனது கையில் பிளேடால் கிழித்து  கொண்டு கையில் வெட்டி விட்டதாக கூறி படமெடுத்து ஹசேனுக்கு அனுப்பி மிரட்டியதும் பின்னர் பணம் கொடுப்பதாக கூறியவுடன் 10 லட்சத்துடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வரவைத்த நிலையில் எதிர்பாராத விதமாக போலீசார் மறைந்து வந்து பிடித்துள்ளனர். 

இதனை அடுத்து பணத்திற்காக தனது மாமாவிடம் கடத்தல் நாடகமாடி  திட்டம் தீட்டிய ஹமீது மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் உட்பட 5 பேரை கைது செய்த காவல்துறையினர்  வழக்கு பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Tags:    

Similar News