விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்ததில் விவசாயி படுகாயம்

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கி கை தவறி வெடித்ததில் விவசாயி படுகாயமடைந்தார்

Update: 2021-08-01 14:22 GMT

நாட்டு துப்பாக்கி வெடித்ததில் காயமடைந்த விவசாயி

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தென்னம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட மோட்டூர் பகுதியை சேர்ந்தவர்  விவசாயி ரஞ்சித் (33). நேற்று மாலை அவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த மாட்டு தீவன பயிரை அறுத்து கொண்டிருந்தபோது அங்கிருந்த ஆடுகளை நாய்கள் துரத்தி வந்துள்ளது. அப்போது விவசாய நிலத்தில் அனுமதியின்றி பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியை ரஞ்சித் அவசரமாக எடுத்த போது வெடித்ததில் வலது கையில் பலத்த காயமடைந்தார். 

காயமடைந்த ரஞ்சித்தை அக்கம் பக்கம் இருந்தவர்கள் மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து உமராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு அதே பகுதியை சேர்ந்த சோமநாதன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் தீவிர  விசாரணை மேற்கொண்டதில் ரஞ்சித்தும், அவரது பெரியப்பா மகன் சோமநாதன் ஆகிய இருவரும்  அனுமதியின்றி கள்ளத்தனமாக நாட்டுத்துப்பாக்கி பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. 

மேலும் அவர்கள் இருவரும் அருகில் உள்ள வனப்பகுதியில் ஒன்றாக சென்று  வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும்  தெரியவந்தது. இதுகுறித்து கிராம நிர்வாக பொறுப்பு அலுவலர் ஜமுனா அளித்த புகாரின் பேரில் போலீசார் ரஞ்சித் மற்றும் சோமநாதன் ஆகிய இருவர் மீது இந்திய ஆயுதங்கள் சட்டத்தில் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆம்பூர் அருகே விவசாய நிலத்தில் அனுமதியின்றி நாட்டு துப்பாக்கி விவசாய நிலத்தில் பதுக்கி வைத்து அதை தவர்தலாக  வெடித்ததில் விவசாயி ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News