அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம்

ஆம்பூர் அருகே அங்கன்வாடி மையத்தில் உணவு சாப்பிட்ட 13க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி

Update: 2021-11-16 14:50 GMT

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மாதனூர் ஒன்றியம் சோமலாபுரம் அங்கன்வாடி மையத்தில் மொத்தம் 33 குழந்தைகள் பயின்று வருகின்றனர். இதில் இன்று 17 குழந்தைகள் மையத்திற்கு வந்தனர். இந்நிலையில் அங்கன்வாடி மையத்தில் இன்று கலவை சாதம் வழங்கப்பட்டுள்ளது. அதில் சில குழந்தைகள் உணவு சாப்பிடுவதில்லை என்பதால் மதிய நேரங்களில் பெற்றோர்களே வந்து உணவு ஊட்டி விடுவது வழக்கம். 

இன்று சோமலாபுரம்  பகுதியை சேர்ந்த வரலட்சுமி என்பவர், தனது குழந்தை ஜனனிக்கு மதிய உணவு ஊட்டி கொண்டிருந்தது போது அதில் பல்லி இருந்ததாக அங்கன்வாடி ஆசிரியை அஞ்சலியிடம் முறையிட்டுள்ளார். உடனடியாக இந்த தகவல் அனைத்து பெற்றோர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,  திடீரென சில குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளது  பின்னர் 14 குழந்தைகளை உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடனடியாக அங்கன்வாடி மையத்திற்கு வந்த வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணி மற்றும் திருப்பத்தூர் மாவட்ட அங்கன்வாடி திட்ட இயக்குனர் கோமதி சுகாதார ஆய்வாளர் மனோகரன் மற்றும் சுகாதாரத்துறை மருத்துவர் சந்தோஷ் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அங்கன்வாடி மையத்தில் இருந்து உணவை சுகாதார ஆய்வாளர் மற்றும் சுகாதாரத் துறையினர் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.  அங்கன்வாடி ஆசிரியை அஞ்சலி மற்றும் சமையலர் மல்லிகாவிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு வந்த ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர்  வில்வநாதன் மற்றும் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு ஆகியோர் குழந்தைகளை பார்வையிட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சை முறையாக வழங்க வேண்டும் என மருத்துவருக்கு உத்தரவிட்டனர் 

Tags:    

Similar News