‘400 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறுவது உறுதி’ மத்திய அமைச்சர் எல். முருகன்

‘400 தொகுதிகளில் பாஜ வெற்றி பெறுவது உறுதி’ என மத்திய அமைச்சர் எல். முருகன் கூறி உள்ளார்.

Update: 2024-05-24 10:22 GMT

நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயர் கோயிலில் மத்திய இணை அமைச்சர் முருகன் சாமி தரிசனம் செய்தார்.

400 பாராளுமன்ற தொகுதிகளில் பாஜக வெற்றிபெற்று, மோடி 3வது முறையாக பிரதமராவது உறுதியாகிவிட்டது என மத்திய இணை அமைச்சர் முருகன் கூறினார்.

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் முருகன், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக நாமக்கல் மாவட்டத்திற்கு வந்தார். அவரது சொந்த கிராமமான, கோனூர் புதுப்பாளையத்தில் உள்ள குலதெய்வ கோயிலான பாமா ருக்மணி சமேத நந்தகோபால சுவாமி கோயிலில் அவர் வழிபாடு செய்தார். பின்னர் நாமக்கல் வந்த அவர் பிரசித்திபெற்ற, நரசிம்மர் சுவாமி கோயில், நாமகிரி அம்மன் கோயில் மற்றும் ஆஞ்சநேயர் கோயில்களில் சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் மத்திய அமைச்சர்  முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்தியா முழுவதும் பிரமாண்டமான ஜனநாயகத் திருவிழாவாக நாடாளுமன்ற  தேர்தல் நடைபெற்று வருகிறது. 5ஆம் கட்ட தேர்தலிலேயே நமது பாரத பிரதமர் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உறுதியாவிட்டது. மொத்தம் 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. ஆறாம் கட்ட தேர்தல் நாளை ஓட்டுப்பதிவு நடக்கின்ற நிலையில், நாடு முழுவதும் மோடி ஆதரவு அலை இருந்து கொண்டுள்ளது. மக்கள் நாட்டின் வளர்ச்சியை விரும்புகின்றனர். கடந்த, 10 ஆண்டுகளில் கோடிக்கனக்கான மக்கள் நேரடியாக பயன் பெற்று வருகின்றனர்.

தேசத்தின் வளர்ச்சி, தேசத்தின் முன்னேற்றம், அடிப்படை கட்டமைப்பு ஆகிவற்றை மக்கள் கவனித்து வருகிறார்கள். கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில், 25 கோடி பேர் வறுமை கோட்டிற்கு மேல் உயர்ந்துள்ளனர். ஏழை மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளது. தமிழகத்தில் மிகப்பெரிய ஆதரவு ஓட்டுகள் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்துள்ளது. ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் பேசியது குறித்து, தமிழக முதல்வர் தவறான விஷயத்தை மக்களிடம் திணிக்க முயற்சிக்கிறார்.

இது முதல்வருக்கு அழகல்ல. பிரதமர் மோடி என்ன சொன்னார் என்பதை புரிந்து கொண்டு முதல்வர் பேச வேண்டும். சிறிய புரிதல் கூட இல்லாமல் முதல்வர் பேசுவது, வெட்கி தலை குனிய கூடிய சம்பவமாக நான் பார்க்கின்றேன். ஒடிசாவின் முக்கிய ஆட்சி பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் சாவி உள்ளது என்ற அர்த்தத்தில் தான் பிரதமர் கூறியுள்ளார். தமிழரையோ, தமிழகத்தை பற்றியோ தவறாக ஏதும் கூறவில்லை. தமிழையும், தமிழக மக்களையும், தமிழகத்தையும் போற்றி வருகிறார் பிரதமர் மோடி. அதனால்தான், திருக்குறளை பரப்புவதற்கு ஆராய்ச்சி மையம், உலகம் முழுவதும் கலாச்சார மையங்கள் திருக்குறளுக்காக அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 35 மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்த்து, உலகம் முழுவதும் அளித்துள்ளார்.

எந்த பிரதமராவது பொங்கல் விழா கொண்டாடி உள்ளாரா. பிரதமர் மோடி, நாமக்கல் மாவட்டம், கோனூர் கிராமத்தில் இருந்து சென்ற விவசாயி மகனான எனது வீட்டில், பொங்கல் விழா கொண்டாடினார். தமிழர் பண்பாட்டிற்கு மிகப்பெரிய கவுரவம் கொடுத்தவர் பிரதமர். தமிழக வளர்ச்சி மேம்பாட்டுக்காக, 10 ஆண்டுகளில், 11 லட்சம் கோடி ரூபாய் பிரதமர் அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாமக்கல்  பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம், நாமக்கல் மேற்கு மாவட்ட பாஜ தலைவர் ராஜேஸ்குமார், நாமக்கல் நகர தலைவர் சரவணன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News