பெண்கள் வேலை வாய்ப்புகளுக்கு பல்வேறு முன்னெடுப்புகள் : ஆட்சியர் தகவல்..!

போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆனைமலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-22 06:30 GMT

ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் உள்ள வி.ஆர்.டி என்ற அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அரசு போட்டி தேர்வுகளுக்கான மையத்தை கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார்பாடி துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சுதா தலைமை தாங்கினார்.

பேரூராட்சித் தலைவர் கலைச்செல்வி சாந்தலிங்ககுமார் முன்னிலை வகித்தார். இதில் பேசிய மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, ஆனைமலை மக்கள் நல அறக்கட்டளை சார்பாகவும், ஆயக்குடி மக்கள் மன்றம் சார்பாக அரசு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் தமிழகத்தில் முதல் முறையாக ஆனைமலை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் 43 சதவீத பெண்கள் தமிழகத்தில் இருந்து வேலை அமர்த்தப்படுவதாகவும், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு தமிழக அரசு பெண்கள் முன்னேற்றத்திற்கு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டினார். உங்களைத் தேடி, உங்கள் ஊரில் என்ற திட்டத்தின்படி ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும், இனி ஒவ்வொரு மாதமும் ஒரு நாள், வட்ட அளவில் தங்கி, கள ஆய்வில் ஈடுபட்டு, அரசு அலுவலகங்களை ஆய்வு செய்து, மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத் திட்டங்களும், சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை உறுதி செய்வர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி ஆனைமலை வட்டத்தில் நேற்று முதல் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி ஆய்வுகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News