சேவல் சண்டை நடத்த கோரி கட்டுச்சேவல் உடன் வந்த விவசாயி

பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி ஒருவர் மனு அளித்தார்.

Update: 2024-01-09 07:00 GMT

சேவலுடன் மனு அளிக்க வந்த விவசாயி.

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு, ரேக்ளா போன்ற போட்டிகள் தகுந்த பாதுகாப்புடன் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனால் அப்போட்டிகள் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது.

அதேசமயம் கிராமப்புறங்களில் மிகவும் பிரபலமான சேவல் சண்டை நடைபெறுவது வழக்கமாக உள்ளது. ஆனால் சேவல் சண்டை நடத்த தமிழக அரசு அனுமதி மறுத்து வருகிறது.

இந்நிலையில் பாரம்பரிய விளையாட்டான சேவல் சண்டை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வேட்டைக்காரன் புதூர் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்கிற விவசாயி கட்டுச் சேவல் உடன் சார் ஆட்சியரியிடம் மனு அளிக்க வந்தார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது பேசிய அவர், “உச்சநீதிமன்றம் சேவல் சண்டை நடத்த அனுமதி அளித்தும், தமிழக அரசு அனுமதி மறுக்கிறது.

கிராமப்புறங்களில் குடும்ப நண்பர்களுடன் சேவல் சண்டை காலம் காலமாக நடத்தி வருகின்றனர். இந்த மாதிரி போட்டிகள் நாட்டுக்கோழிகளை ஊக்குவிக்கும் விதமாக போட்டிகள் நடத்தப்படுகிறது. சேவல் சண்டைக்கு தயாராகும் சேவல்களின் விலை ரூபாய் 20,000 முதல் லட்சம் வரை உள்ளது. இப்போட்டிகளை நடத்த அரசு அனுமதி அளிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News