ஹவாலா பணம் என நினைத்து காரை கடத்த முயன்ற சம்பவம்: மேலும் ஏழு பேர் கைது

பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி வரும் காரில் ஹவாலா பணம் கடத்தப்பட்டு வருவதாக நினைத்து காரை கடத்த முயன்றனர்.

Update: 2024-06-21 13:45 GMT

கார் கடத்த முயன்ற சம்பவத்தில் மேலும் கைது செய்யப்பட்டவர்கள்

கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). இவர் கொச்சியில் விளம்பர ஏஜென்சி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில், தனது நண்பர் சார்லஸ் உள்ளிட்ட 4 பேருடன் கம்ப்யூட்டர் மற்றும் உதிரி பாகங்கள் வாங்க பெங்களூருக்கு காரில் கடந்த 13 - ஆம் தேதி சென்று உள்ளார்.

பொருள்களை வாங்கிக் கொண்டு கோவை வழியாக கேரளா சென்று கொண்டு இருந்து உள்ளார். மதுக்கரை எல் & டி நெடுஞ்சாலையில் நள்ளிரவில் காரில் சென்று கொண்டு இருந்த போது, திடீரென 2 கார்களில் முகமூடி அணிந்து வந்தவர்கள் சித்திக் வாகனத்தை மறித்து உள்ளனர்.

அவர் காரின் கண்ணாடியை திறக்காத நிலையில், கண்ணாடியை உடைத்து காரை கடந்த முயன்று உள்ளனர். முகமூடி அணிந்து வந்த 4 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து கட்டையால் தாக்கி பணத்தைக் கேட்டுனர். இதில் நிலை தடுமாறிய அவர் மீண்டும் அவர் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் செல்ல முயன்றார். முகமூடி கும்பல் தொடர்ந்து சுற்றி வளைத்தனர்.

இதையடுத்து சுதாரித்துக் கொண்ட அஸ்லாம் சித்திக் காரை அருகில் இருந்த சுங்க சாவடிக்கு ஓட்டிச் சென்று உள்ளார். அங்கு போலீஸார் நின்று கொண்டு இருந்ததை பார்த்த மர்ம கும்பல் தப்பிச் சென்றது. இது குறித்து மதுக்கரை காவல் நிலையத்தில் அஸ்லாம் சித்திக் புகார் அளித்தார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளைக் கைப்பற்றி ஆய்வு மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, காரை கடத்த முயன்ற கேரள மாநிலத்தை சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ்பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதில், சிவதாஸ், அஜய்குமார் இருவரும் தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராகப் பணியாற்றி வருவதும். விஷ்ணு இந்திய ராணுவத்தில் பணியாற்றிய நிலையில் விடுமுறையில் வீட்டுக்கு வந்தவர் மீண்டும் பணிக்குச் செல்லாததும் தெரியவந்தது.

பெங்களூரில் இருந்து கேரளா நோக்கி வரும் காரில் ஹவாலா பணம் கடத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்ததும், அதை காருடன் கொள்ளை அடிக்க முயன்ற நிலையில், தவறுதலாக அஸ்லாம் சித்திக்கின் காரை கடத்த முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 4 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். வேறு யாருக்கும் எனும் இந்த சம்பவத்தில் உள்ள தொடர்புகள் குறித்தும் சம்பவத்தின் போது அங்கு இருந்து தப்பிச் சென்ற நபர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இதனைத் தொடர்ந்து கேரளாவை சேர்ந்த நித்தின் (23), ஹரிஷ் குமார் (28), ஜினி ( 30), அனீஸ் (38), நந்தகுமார் ( 31), ராஜிவ் (35), ஜிதிஸ் ( 32) ஆகிய ஏழு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News