கோவையில் கள்ளக் காதலி வெட்டிக் கொலை: ஒருவர் கைது

ஆத்திரத்தில் பேச்சிமுத்து வசந்தகுமாரியை கட்டையால் பின்னந்தலையில் அடித்துள்ளார். மேலும் அரிவாளால் பலமுறை வெட்டி உள்ளார்

Update: 2024-03-16 08:15 GMT

வசந்தகுமாரி

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமாரி. இவர் 13 வருடங்களுக்கு முன்பு தனது கணவரை இழந்த நிலையில், தனது மகன்கள் ஸ்ரீராம் மற்றும் ஸ்ரீ நிதிஷ் ஆகியோருடன்‌ வசித்து வந்தார். வீட்டின் அருகில் உள்ள ஒரு நிறுவனத்தில் தினக் கூலியாக வேலைக்கு சென்று வந்தார். இவரது வீட்டிற்கு அருகே உள்ள பேச்சிமுத்து என்பவர் தனது குடும்பத்தை பிரிந்த நிலையில், தனியாக குடியிருந்து கொண்டு செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வசந்தகுமாரிக்கும், பேச்சிமுத்துவிற்கும் இடையே கடந்த இரண்டு வருடங்களாக திருமணத்தை மீறிய தகாத உறவில் இருந்து உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சில மாதங்களாக வசந்தகுமாரி வேறு சில நபர்களுடன் போனில் பேசி வந்ததை பேச்சிமுத்து கண்டித்து உள்ளார். இது தொடர்பாக கேட்ட போது நேற்று இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் பேச்சிமுத்து வசந்தகுமாரியை கட்டையால் பின்னந்தலையில் அடித்துள்ளார். மேலும் அரிவாளால் அவரை பலமுறை வெட்டி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே வசந்தகுமாரி உயிரிழந்தார்.

வசந்தகுமாரியின் அலறல் சத்தம் கேட்டு வீட்டின் அருகில் வசித்து வரும் கவிதா என்பவரும், வசந்தகுமாரியின் மூத்த மகன் ஸ்ரீராம் என்பவரும் கதவைத் தட்டி உள்ளனர். அப்போது வெளியே வந்த பேச்சிமுத்து, வசந்தகுமாரியை கொலை செய்து விட்டதாக கூறி உள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த மதுக்கரை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பேச்சிமுத்துவை கைது செய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News