கோவை: சாலையில் சீரியல் பார்த்து டூவீலர் ஓட்டியவர் மீது போலீசார் வழக்கு

கோவையில், சாலையில் சீரியல் பார்த்தவாறு வாகனம் ஓட்டிய நபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Update: 2021-07-30 16:30 GMT

முத்துசாமி

கோவை காந்திபுரம் மேம்பாலத்தில், செல்போனில் சீரியல் பார்த்தவாறு வாகன ஓட்டி ஒருவர் அதிவேகமாக இருசக்கர வாகனத்தை இயக்கியதை, சக வாகன ஓட்டி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டது.

இதுதொடர்பாக கோவை மாநகர போக்குவரத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வீடியோவில் பதிவாகியிருந்த இருசக்கர வாகனத்தின் பதிவெண்ணைக் கொண்டு, அதன் உரிமையாளர் கோவை கண்ணப்ப நகர் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி (35) என்பதை கண்டறிந்த போலீசார், அவரை நேரில் அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசாரின் விசாரணையில்,  அவர் காந்திபுரம் 100 அடி சாலையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருவது தெரியவந்தது. நேற்று இரவு பணி முடித்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது தனது செல்போனில் ஹாட்ஸ்டார் செயலி மூலம் மெகா சீரியலை பார்த்து ரசித்தபடியே இருசக்கர வாகனத்தை அதிவேகமாக இயக்கியதையும், முத்துசாமி ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அவர் மீது அபாயகரமாக வாகனம் ஓட்டுதல், வாகனம் ஓட்டும் போது செல்போன் பயன்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்ததுடன், 1200 ரூபாய் அபராதம் விதித்தனர்.

Tags:    

Similar News