கஞ்சா வழக்கு கைதிகள் 3 பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை..!

இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-06-21 13:30 GMT

குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள்

கோவை மாவட்டம் ஆனைமலை காவல் நிலைய பகுதியில் 8 கிலோ 400 கிராம் கஞ்சா மற்றும் 3 கிலோ 100 கிராம் கஞ்சா சாக்லேட்டை விற்பனைக்கு வைத்திருந்த கேரள மாநிலத்தைச் சேர்ந்த முகமது ஷஹாபுதீன்(50) மற்றும் அவரது மகன் ஆரிஃப் ராஜா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் இருவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ள நிலையில், பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக முகமது ஷஹாபுதீன் மற்றும் ஆரிஃப் ராஜா ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி இருவர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளிகளான முகமது ஷஹாபுதீன் மற்றும் ஆரிஃப்ராஜா ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

இதேபோல கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி காவல் நிலைய பகுதியில் 1 கிலோ 350 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த மாலிக் பாஷா (26) என்பவரை கருமத்தம்பட்டி காவல் துறையினர் கைது செய்தனர். பொது ஒழுங்கு மற்றும் பொது சுகாதாரப் பராமரிப்பிற்கு பாதகமான செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக மாலிக் பாஷா மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் பரிந்துரை செய்தார்.

அப்பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். அவ்வுத்தரவின் அடிப்படையில் கஞ்சா வழக்கு குற்றவாளியான மாலிக் பாஷா குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தனர்.

பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தாலோ, பொது சுகாதார பராமரிப்பிற்கு பாதகமாக செயல்பட்டாலோ அவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். இந்த வருடத்தில் இதுவரை கோவை மாவட்டத்தில் 33 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News