ஏர் கலப்பையுடன் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர்.

Update: 2024-01-23 09:45 GMT

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அந்த அமைப்பின் மாவட்ட பொறுப்பாளர் துரைசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மண் வெட்டி, ஏர் கலப்பையுடன் வந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் இது குறித்து பேசிய அவ்வமைப்பினர், விவசாய தொழிலாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட நல வாரியம் கடந்த அதிமுக ஆட்சியில் கலைக்கப்பட்டது என குற்றம்சாட்டினர்.

தொடர்ந்து பேசிய அவர்கள், கலைக்கப்பட்டு விவசாய தொழிலாளர்களுக்கு உதவாத உழவர் பாதுகாப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது எனவும், எனவே இதனை கைவிட வேண்டுமெனவும் தெரிவித்தனர். மேலும் விவசாய தொழிலாளர் நல வாரியத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் எனவும், 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கூறிய அவர்கள், கூலி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் 40 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News