கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி ஒரு நபர் திடீரென தற்கொலைக்கு முயன்றார்.

Update: 2024-10-21 08:30 GMT

தற்கொலைக்கு முயன்ற நபரை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இன்று கோவை ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்த அவர், திடீரென ஆட்சியர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். அலுவலக வாயில் முன்பாக இருந்த காவலர்கள் அவரை மீட்டு உடலில் தண்ணீரை ஊற்றி மீட்டனர். அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அன்னூர் மாணிக்கம் பாளையத்தில் கட்டிட வேலை செய்த பணிக்கு 57 ஆயிரம் கொடுக்க வேண்டிய நிலையில், ஐந்தாயிரம் பணத்தை மட்டும் கொடுத்து விட்டு மீதமுள்ள 52 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுக்காமல் ஏமாற்றுவதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை இல்லை எனவும், பணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். இதனையடுத்து மாணிக்கத்தை மீட்ட காவல் துறையினர் அவரை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாணிக்கம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உருண்டபடி வந்து இதே கோரிக்கைக்காக மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News