வெங்கடேச பெருமாள் கோவில் மகா கும்பாபிஷேகம்

வெங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-02-22 08:15 GMT

 ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறறது. சுவாமியை வழிபட்ட பக்தர்கள்.

மாதவரம் அடுத்த தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சி ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா நடைபெறறது.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி புழல் ஒன்றியம் தீர்த்தக்கிரியம்பட்டு ஊராட்சியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் ஆலய மகா கும்பாபிஷேகம் விழா ஆலய நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் ஏற்பாட்டில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சியில் விக்னேஸ்வரபூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம்,வாஸ்து சாந்தி பிரவேசபலி மற்றும் கோபூஜை, ரக்ஷாவந்தனம், நாடிசந்தானம், மகாபுர்ணாஹூதி உள்ளிட்ட யாகசாலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.பின்னர் யாகசாலையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட புனிதநீர் அடங்கிய கலசங்களை மேளதாளத்துடன் ஆலய மாடவீதி உலாவந்து பட்டாச்சாரியர்கள் கோபுர விமானம், மூலவர் மற்றும் கொடிமரம், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் உள்ளிட்ட பிரதானபலிபீடத்திற்கு புனிதநீரால் மகா கும்பாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.


பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதணைத்தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வண்ணமலர்கள் மற்றும் திருஆபரணங்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீ வெங்கடேசப் பெருமாள் உற்சவர் சிறப்பு அலங்காரத்துடன் மேளதாள வானவேடிக்கைவுடன் திருவீதி உலா நடைபெற்றது.

இவ்விழாவிற்கு புழல் ஒன்றிய குழு துணை சேர்மன் சாந்திபாஸ்கர், ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கவிதாடேவிட்சன், பாரதிசரவணன் ஆலய நிர்வாகிகள் சந்திரகுமார், தேவதாஸ், விஜயகுமார், மணிவண்ணன், கிராம பெருதனக்காரர்கள் ஆனந்தன், தாமோதரன், கருணாநிதி உள்ளிட்ட விழாகுழு உறுப்பினர்கள், சுற்றுவட்டார பக்தர்கள், கிராம பொதுமக்கள் கலந்துகொண்டு அர்ச்சனைகள் செய்து சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

Similar News