பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம்

PMK Free Medical Camp எண்ணூரில் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாமை அன்புமணி ராமதாஸ் துவக்கி வைத்தார்.

Update: 2023-12-30 06:45 GMT

PMK Free Medical Camp

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின்  பாதிப்பு அதிகம் பெற்ற இடமான  சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழைநீர் தேக்கமடைந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது பெரும் பாதிப்படைந்தது. இதனால்  பல நாட்கள் தண்ணீர் தேங்கி உண்ண உணவின்றி  தவித்து வந்தனர். எண்ணுார் பகுதியில்  எண்ணெய் கசிவுகளும் மழைநீரில் கலந்ததால்  அப்பகுதி பொதுமக்கள் பெரிதும்  அவதிப்பட்டனர். இதனால் பலருக்கும் சுவாச கோளாறு பாதிப்பு ஏற்பட்டதாக  செய்திகள் வெளியாயின. வீடுகளிலிருந்த உடமைகளிலும் அந்த எண்ணெய்க் கசிவுகள் பரவியதால் அத்தனை பொருட்களும் சேதமடைந்து போயின. இந்நிலையில் இப்பகுதி வாழ் மக்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. சென்னை எண்ணூர் பகுதி பொதுமக்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

PMK Free Medical Camp


எண்ணுாரில் நடந்த  இலவச மருத்துவ முகாமில்  பாமக தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். 

சென்னை எண்ணூர் நேருநகர், கமலம்மாள்நகர், இந்திராநகர் ஆகிய பகுதியில் உள்ள சென்னை மாநகராட்சி பள்ளி வளாகத்தில் மிக்ஜாம் புயல் மற்றும் கனமழையால் எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பசுமை தாயகம் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் நடைபெற்றது.முகாமிற்கு சிறப்பு அழைப்பாளராக பாட்டாளி மக்கள் கட்சி தலைவரும் முன்னாள் நடுவண் குடும்பநலன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்து பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு ஆறுதல் கூறி உடல் பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தார். மேலும் மருத்துவர் சரத்ராஜ் மற்றும் மருத்துவ குழுவினர்கள் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடல் பரிசோதனைகள் செய்து சிகிச்சை அளித்து மருந்து மாத்திரைகளை வழங்கினர்.முகாமில் அருள், ராதாகிருஷ்ணன், சத்யா,  சபாபதி, டில்லிநாயக்கர், பிரகாஷ், ஞானபிரகாசம், சண்முகம், பாஸ்கர், ராஜேந்திரன், மோகன், பூபதி,எண்ணூர் டில்லிமோகன்,  சரவணருபன்,  துளசிங்கம், சகாதேவன், ரமேஷ், பாபு,சதீஷ் உள்ளிட்ட அனைத்து நிலை நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News