திருவள்ளூர் அருகே மழைநீர் வடிகால் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதி

திருவள்ளூர் அருகே மழைநீர் செல்ல வடிகால் கால்வாய் வசதி இல்லாததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

Update: 2022-07-12 04:00 GMT

மழைநீர் செல்ல வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர்  குளம் போல் தேங்கி நிற்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டம் மாதவரம் தொகுதி புழல் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராண்ட்லையன் ஊராட்சியில் சுமார் 8. ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். குறிப்பாக இந்த ஊராட்சியில்1-வது வார்டு திருப்பூர் குமரன் தெருவில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இந்நிலையில் இத்தெருவில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்ட் கான்கிரீட் சாலை பழுதடைந்து குண்டும் குழியாக மாறி உள்ளது. தற்போது பெய்துவரும் மழையால் தெருவில் மழைநீர் தேங்கி நின்று வெளியே செல்ல வடிகால் கால்வாய் இல்லாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழை நீரில் கலந்து சாலையில் குளம் போல் காட்சியளிக்கிறது. மேலும் இத்தண்ணீர் துர்நாற்றம் வீசுவதோடு அதில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு வகையான விஷ காய்ச்சல் ஏற்படும் அபாயமும் உள்ளது.

இதுபற்றி இத்தெருவில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் கூறுகையில் இந்த திருப்பூர் குமரன் தெருவில் காலங்காலமாக வசித்து வருவதாகவும் எங்கள் பகுதியில் கடந்த 15. ஆண்டுகளுக்கு முன்பாக போடப்பட்ட சிமெண்ட் சாலை மிகவும் பழுதடைந்து அதில் உள்ள ஜல்லி கற்கள் வெளியே தெரிந்த படி வயதானவர்கள் இரவு நேரங்களில் சாலை தெரியாமல் அதில் சிக்கி காயங்கள் ஏற்படுவதாகவும் மழைக்காலம் வந்துவிட்டால் மழைநீர் மற்றும் கழிவு நீர் கலந்து குளம் போல் காட்சியளிக்கும் இந்த நீரில் சில நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷம் நிறைந்த ஜந்துகளும் வீட்டுக்குள் வந்து விடுவதாகவும் மேலும் மழைக்காலம் வந்துவிட்டால் மழை நீர் சாலையிலே நிற்பதால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கச் செல்வதற்கும் வெளியேற முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும் மழைக்காலங்களில் அப்பகுதி பெண்கள் முழங்கால் அளவில் மழை நீரில் நின்று தெரு குழாவில் தண்ணீர் எடுத்துச் செல்வதாகவும் இத்தகைய அவல நிலை உள்ள எங்கள் பகுதிக்கு சாலை மற்றும் வடிகால் கால்வாய் அமைத்து தர வேண்டுமென ஊராட்சி நிர்வாகத்திடமும் புழல் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை கோரிக்க வைத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வேதனை தெரிவித்தனர்.

எனவே பருவ மழை  தொடங்குவதற்கு முன்பே திருப்பூர் குமரன் தெருவில் புதிய சாலை மற்றும் வடிகால் கால்வாய் அமைத்து தரவேண்டும் என அப்பகுதி குடியிருப்பு வாசிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News