மாதவரத்தில் சிறுமி பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிரிழப்பு
சென்னை மாதவரத்தில் சிறுமி பாம்பு கடித்து மருத்துவமனையில் உயிரிழந்தாள்.;
திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் கண்ணபிரான் கோவில் தெருவை சேர்ந்தவர் சுதாகர் (வயது 42) இவர் மரக் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி அஸ்வினி. இவர்களுக்கு 6 வயதில் இரட்டை பெண் குழந்தைகள் உண்டு.
இவர்களில் டார்லியா( வயது 6) என்ற குழந்தை அருகில் உள்ள பள்ளியில் படித்து வந்தாள். இந்நிலையில் இரவு சுமார் 9 மணியளவில் வீட்டு முற்றத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு டார்லியாவை கடித்ததாக கூறப்படுகிறது.
இதில் உடம்பெல்லாம் விஷம் ஏறி வலியால் துடித்த குழந்தையை பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர் . அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது .ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் குழந்தை இறந்து விட்டது. தகவலறிந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாதவரம் காவல் நிலைய ஆய்வாளர் காளிராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்.