பாட்டில்களில் தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை

மாதவரத்தில் சட்டவிரோதமாக தாய்ப்பால் விற்பதாக அதிகாரிகள் திடீரென கடையை சோதனை செய்து 200 பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-05-31 09:45 GMT

சோதனை நடத்திய அதிகாரிகள் குழு.

மாதவரத்தில் சட்ட விரோதமாக பாட்டில்களில் அடைந்த தாய்ப்பால் விற்றதாக உணவு பாதுகாப்பு துறை அதிரடி சோதனை நடத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் கே கே ஆர் கார்டன் முதலாவது தெருவில் லைஃப் வேக்ஸின் ஸ்டோர் என்ற மருந்து விற்பனை கடை உள்ளது. இதனை கேகேஆர் கார்டன் பகுதியை சேர்ந்த செம்பியன் முத்து (வயது 40) என்பவர் நடத்தி வருகிறார். இங்கு தாய்ப்பால் பாட்டில்களில் அடைத்து விற்பதாக உணவு பாதுகாப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் போஸ், கஸ்தூரி ஆகியோர்கள் சோதனை செய்தபோது குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 200க்கு மேற்பட்ட பாட்டில்களில் தாய்ப்பால் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.


சுமார் 200 மிலி கொண்ட இந்த தாய்ப்பால் பாட்டில் விலை சுமார் 700 ரூபாய்க்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.இந்த தாய்ப்பால் யாரிடமிருந்து பெறப்பட்டது எங்கிருந்து யார் மூலமாக வந்தது என்பது போன்ற விவரங்கள் குறித்து, மருத்துவத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதன் பின்னர் முழுமையான தகவல் கிடைக்கும் என தெரிகிறது. மேலும் இதற்கு முறையான உரிமம் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடப்பட்டது. சட்டவிரோதமாக மாதவரம் பகுதியில் தாய்ப்பால் விற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News