சென்னை நுழைவு வாயிலில் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீஸ் திணறல்

சென்னையின் முக்கிய நுழைவு வாயிலில் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறினர்.

Update: 2021-05-18 15:26 GMT

பூந்தமல்லியில் வாகன ஓட்டிகளை கட்டுப்படுத்தும் பணியில் போலீசார்.

கொரோனா ஊர்டங்கு காரணமாக அத்தியாவசிய தேவைகள் இன்றி பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசும், காவல்துறையும் அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் பொதுமக்கள் பலர் அரசின் பேச்சைக் கேளாமல் வாகனங்களில் அணிவகுத்து வெளியே சென்ற வண்ணம் உள்ளனர்.

வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் போலீசார் ஆங்காங்கே தெருக்களில் தடுப்புகள் அமைத்து உள்ளனர். மேலும் பூந்தமல்லி, குன்றத்தூர், மாங்காடு, வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த தெருக்கள் முழுவதும், இரும்பு தடுப்புகள் வைத்து அடைக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

ஆனாலும் சாலைகளில் வாகனத்தின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக சென்னையின் முக்கிய நுழைவு வாயிலான வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆற்காடு சாலையில் வாகனங்கள் அதிக அளவில் அணிவகுத்து வருவதைக் காண முடிகிறது. அனைத்து வாகனங்களும் உள்ளே நுழையாத வகையில் போலீசார் தடுப்பு பணியில் ஈடுபட்டாலும், வாகனங்களின் எண்ணிக்கை சற்றும் குறைந்தபாடில்லை.

சில நேரங்களில் வாகன ஓட்டிகள் உடன் போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபடுவதால் பெரும் பரபரப்பு ஏற்படுகிறது. கட்டுப்பாடுகள் எவ்வளவுதான் விதித்தாலும் வாகனங்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த முடியாமல், போலீசார் திணறி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மையாக உள்ளது.

இதன் ஒரு பகுதியாக உரிய ஆவணங்கள் மற்றும் அத்துமீறி செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்து, காவல் நிலையங்களில் நிறுத்தி வைக்கும் பணியில் போலீசார் மீண்டும் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News